1980 களின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு/சாவித்திரி கண்ணன்

1980 களின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு பொதுக் கூட்டம்! சென்னை பெரியமேடு பகுதியில் நடந்த அந்த நிகழ்ச்சியை போட்டோ கவரேஜ் செய்ய போயிருந்தேன். தோழர் சங்கரய்யாவும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சிவாஜி பேசுவதற்கு முன்பாக தோழர் பேசுகிறார்! பேச்சில் அனல் தெறிக்கிறது! அந்தக் குரல் அடிவயிற்றில் இருந்து அறச் சீற்றத்துடன் வெளிவருகிறது! எள்ளளவும் ஜோடனைகளோ, பகட்டுத்தனமோ இல்லாத பொது நலன் சார்ந்த பேச்சு! நான் சிவாஜியை அடிக்கடி பார்த்தேன். அவர் சிலிர்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் சங்கரய்யாவை! சங்கரய்யா பேசி முடித்து திரும்பும் போது, சிவாஜி எழுந்து பணிவோடு வணங்கினார்! அதன் பிறகு சிவாஜி பேசும் போது சொன்னார், ”படங்களில் நான் பேசும் வீர வசனங்களை கேட்போர் என்னை சிம்மக்குரலோன் என்பார்கள். என் வாழ்க்கையில் உண்மையான சிங்கத்தின் கர்ஜனையை இன்று இங்கு கேட்டேன்! சுதந்திர போராட்டத் தியாகி, ஒப்பற்ற தலைவர், ஐயா, சங்கரய்யா பேசியபடி நாம் செயல்பட வேண்டும்’’ என்றார்.

இந்த சம்பவத்தை ஒரு ரீல் ஹீரோ, ரியல் ஹீரோவை அடையாளம் கண்டுணர்ந்த சம்பவமாக உணர்ந்தேன்!


நன்றி: அறம்