இன்று 09.12 23 அன்று விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.
உனக்கு என்ன வேண்டும் என
நீ அறிந்திருக்கிறாயாமே?
நாளைக்கு, நாளை மறுநாள், அடுத்த வருடம்
என்ன செய்ய வேண்டுமென
திட்டங்கள் வைத்திருக்கிறாயாமே?
சிக்கலான பாதைகளுக்கிடையே
நீ போகவேண்டிய பாதை எதுவென
புரிந்து வைத்திருக்கிறாயாமே?
நம்பிக்கைத் துரோகம்
அல்லது
கடமை தவறுதல்
இரண்டில் ஒன்றுதான் தேர்வு
செய்ய வேண்டுமெனில்
மூன்றாவதாய் ஒன்று தேர்வு செய்ய
உனக்கு சாத்யப்பட்டிருக்கிறதாமே?
அடுத்து படிக்கவேண்டிய புத்தகம்,
எழுத வேண்டிய கவிதை,
வசப்படுத்த வேண்டிய கோட்டை எதுவென
தீர்மானமாய் இருக்கிறாயாமே?
கேள்விகள், மேலும் கேள்விகள் என
அயர வைக்கும் நடைமுறை வாழ்விலும்
தளராமல் சிக்கெடுத்துப் பதில்களைத்
தெரிந்தெடுத்து வைத்திருக்கிறாயாமே?
நேற்றிரவும் தூங்கினாயாமே?
. ( “ஆளுக்கொரு வானம்”தொகுப்பிலிருந்து)
Arumai 👏👏👏👌🙏