பொழுது விடிந்தால் போதும். சேனல் மாற்றி சேனலில் தினசரி பலன்கள் யாராவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். வெறும் ஜோதிட பலன்கள் மட்டும் இல்லாமல் மேலும் எத்தனையோ சுவாரசியமான தகவல்களை அளிக்கிறார் என்பதற்காக திரு ஹரிகேசநல்லூர் சொல்லும் ஜோசிய பலனை ஜி டிவியில் கேட்பதுண்டு.
நான்கு நாட்களாக தொடர்ந்து அவர் உங்கள் கிரக பலன்கள் மிக அருமையாக இருக்கின்றன. பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்க வாய்ப்பு உண்டு என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
‘ நமக்கு என்னடா பூர்வீக சொத்து? நம்ம அப்பாவும் அம்மாவும் தான் சொத்து. அவர்களே போய் விட்டார்களே’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அப்பாவின் திவசம் வந்தது.
சகோதரன் வீட்டுக்கு திவசத்தில் கலந்து கொள்வதற்காக நாங்கள் கூட பிறந்தவர்கள் ஆறு பேரும் குடும்பத்தோடு போனோம் .
திவசம் முடிந்ததும் எல்லோரையும் மாடிக்கு அழைத்துப் போனான் அவன். அங்கே ஒரு அறை முழுவதும் அப்பா தன் வாழ்நாளில் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. நாலு கள்ளிப்பெட்டிகளில் இருந்த புத்தகங்களை எடுத்து அறை முழுவதும் பரப்பி வைத்திருந்தான்.
” எல்லாரும் அவங்க அவங்களுக்கு என்ன புத்தகம் வேணுமோ இதுல இருந்து பார்த்து எடுத்துக்கோங்க. இதெல்லாம் நம்ம அப்பாவோட சொத்து” என்றான் சகோதரன் புன்னகையோடு.
எனக்கு சட்டென்று பொறி தட்டியது. இதைத்தான் ஒருவேளை ஜோசியர் ‘பூர்வீக சொத்தில் உங்களுக்கு பங்கு கிடைக்கும்’ என்று சொல்லி இருப்பாரோ?’ என்று.
உண்மைதானே? எங்களுடைய பூர்வீக சொத்து இதுதானே?
ஆஹா! அருமை!
இதுதான் உண்மையான சொத்து !👏👏🙏👌🌺