யோகி ராம்சுரத்குமார் (இன்னிசை வெண்பா)/லலிதா நவின்

தாகமே தேடலே தண்ணீரே யோகிராமா
மோகமே போகமே மோட்சமே யோகிராமா
ஏகனே ஆத்மனே எந்தையே யோகிராமா
வேகமாய் வந்தணைக்க வா

தென்றலே தேனே திரவியமே தேனிசையே
அன்புருவே ஆருயிரே ஆறறிவே ஆவமுதே
மண்ணே மலரே மணமே மரகதமே
விண்ணேயென் யோகிராமா வா

அன்பருக் கன்பனே அன்புருவே யோகிராமா
மன்னவா ஏனெந்தன் முன்தோன்ற யோசனையோ?
நெஞ்சக் குழியதிலே நீதானே வாழ்கிறாய்
கொஞ்சும் தமிழுன்னைக் காட்டு

பழகிப்பார் என்னுடன் பேரருளே ராமா
அழகுன்னை அன்பால் அடிமைசெய்வேன் ராமா
வழங்கிடுவாய் வாரி வரங்களதை ராமா
பிரியமறுப் பாயதன் பின்பு