எஸ்ஸார்சி/நிற்க அதற்குத் தக

இணைய கால கவியரங்கம் 85

11/1/24

அவன் எழுத்தாளன்
அவ்வப்போது மொபைல்
வைத்துப் போட்டோ
எடுத்து எடுத்து
மகிழ்ந்து
போகிறான்
தன் பெயரை அச்சில்காண
ஓயாது அலைகிறான்
விருதுக்குத்தன் பெயர்
சிபாரிசு ஆகாதா எனப்
பார்த்துப்பார்த்து
தூக்கம் தொலைக்கிறான்.
மக்கள் போராட்டம் எதனிலும்
அவன்
முன் கை எடுத்துப் போராடுவதே இல்லை
பெண்கள் சீரழிக்கப்படு வதற்கு எதிராய்க்
குழந்தைத் தொழிலாளர்கள்
உருக்குலைக்கப்படுவதற்கெதிராய்
குடித்துக் குடித்து இளைய சமுதாயமும்
போதைப்பொருள் உபயோகித்து மாணவச்சமுதாயமும்
சிதைந்து போவதற்கெதிராய்
கற்பழிப்புக் கொலை செய்த
பதினோரு பேர் விடுதலை ஆனதற்கெதிராய்
சுண்டுவிரல் அசைத்திருப்பானா அவன்
திருக்குறளை விடாமல் படித்தான்.
அவனைக் கற்றபின்
நிற்கத்தான் சொன்னார்
வள்ளுவர்
இந்த நிற்க இல்லையே அது.