எஸ்ஸார்சி/வேண்டும்

கவிதை எழுதுதல் பெரிசல்ல
எழுதிய அதைப்படித்துப்பார்க்க
நிறைவொன்று வரவேண்டும்
மனதிற்குள் நிச்சயமாய்.
யாரும் சால்வை போற்றி
சான்றிதழ்‌ அளித்து
சன்மானம் வழங்குவது
எல்லாம் அதற்குப்பின்னேதான்.
படைப்பாளிக்கு
என்றோ எழுதிய வரிகள்
என்றைக்கு எடுத்துப்படித்தாலும்
அவனோடு பேசிப்பார்ப்பது
வாய்க்க வேண்டும்
உயிர்ப்போடு உலவும்
அவ்வெல்லுஞ்சொல் மனத்திரையில் பளிச்சிட வேண்டும்
வாசகனை மிடுக்காய்
அது அசைத்துப்பார்க்க வேண்டும்.
‘அட’ என்று கவிதை வாசித்த மனம் புன்னகைத்துப்பின்
நகர வேண்டும்.
அதற்கீடாகாது
ஒரு போதும்
ஆயிரம் புகழ்ச்சிகள்.

(இணைய கால கவியரங்கம் 100 – 26/1/24)