எல்.ரகோத்தமன்/மஞ்சள் மகிமை


 
உனக்கு மஞ்சள் நிறம்
மிகவும் பிடுக்குமென
எனக்குத் தெரியும்!
 
எனக்கும் பிடிக்குமென
உனக்குத் தெரியும்!
 
நம் நேசத்தின் சாட்சியாய்
நாம் வரிந்து கொண்ட
நிறம் அது!
 
நீண்ட நாட்களுக்குப்பின்
என் வீட்டு
பால்கணி தொட்டியில்
அதிசயமாய்
பளிச்சென பூத்தது
ஒரு மஞ்சள் ரோஜா!
 
அதன் இதழ்களை
ஒவ்வொன்றாக கிள்ளி
அது பூத்த தொட்டியிலேயே
போட்டுக் கொண்டிருந்தேன்!
 
மந்திரம் போல் தொடர்ந்தது
நம் நேசத்தினூடே உதிர்ந்த
சொற்கள்!
 
ஒவ்வொரு இதழ்
உதிர்விலும்
நம் நேசத்தின் விரிசலை
இட்டு நிரப்ப
ஒரு மௌனம்
குடிகொண்டிருப்பதை
என்னால் மட்டுமே
உணர முடிந்தது!
 
 நீயும் உன் வீட்டு
தோட்டத்துப் பூவை
கிள்ளிப் போட்டுப் பார்!
மௌனம் உனக்கு
அமைதியாய் பாடமெடுக்கும்!


06-02-2024
 
                                                  *