டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் -198

தூங்கும் போதும் அருள் பொழியும் கண்கள்
————————————————————–

கைகேயி தூங்குகிறாள்.அவள் தூங்கும் அழகை இதைவிட அழகாக கம்பனைத் தவிர வேறு
யாரால் கூறமுடியும்?

கைகேயி புரிந்து கொள்ள முடியாத ஒரு பாத்திரம். அவள் நல்லவளா, கெட்டவளா ?

கைகேயி அன்பும்,கருணையும் மிக்கவள்

கைகேயி தூங்கும் போதும் அவள் கண்ணில் இருந்து அருள் வழிகின்றது.

கைகேயி பஞ்சணையில் படுத்து இருக்கிறாள். வெள்ளை வெளேர் என்ற பட்டு
மெத்தை. அதன் மேல் விரித்த வெள்ளை விரிப்பு ஒரு சில இடங்களில் மடிந்தும்
சுருங்கியும் இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்றால் பாற் கடலில் அலை
அடிப்பது போல இருக்கிறது. மடிப்புகளும் சுருக்கங்களும் அலை போல
இருக்கிறது.

அதன் மேல் அவள் படுத்து இருக்கிறாள். அவள் சிவந்த முகம் உடையவள்.
மேலிருந்து பார்த்தால் பாற்கடலில் பூத்த தாமரை போல் இருக்கிறது.

அவள் உடல் கொடி போல் மெலிந்து வளைந்து வளைந்து இருக்கிறது. தாமரை
கொடியில் பூத்தது மாதிரி இருக்கிறது. நீர் நிலையில் தாமரை கொடி நீரின்
சலனத்திற்கு ஏற்ப ஆடுவது மாதிரி இருக்கிறது அவள் படுத்து இருப்பது, அவள்
அசைவது எல்லாம்.

அவளின் அவயங்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட மணிகள் மாதிரி இருக்கிறது. அப்படி
ஒரு ஜொலிக்கும் அழகு.

அமைதியாகத் தூங்குகிறாள். முகத்தில் ஒரு அமைதி, சாந்தம். உறங்கும் போதும்
கண் ஓரம் ஒரு அருள்.

பாடல்

நாற் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர்
பாற்கடல் படு திரைப் பவள வல்லியே-
போல், கடைக் கண் அளி பொழிய, பொங்கு அணை-
மேல் கிடந்தாள் தனை விரைவின் எய்தினாள்.

பொருள்

நான்கு கடல் கண்டு எடுத்த மணி (வைரம் போல).தாரை மலர்ந்த்து  (போல) பாற்
கடலில் எழுகின்ற அலைபோல, பவளக்கொடி போன்ற அழகிய பெண் போல கண் ஓரம் கருணை
பொழிய  பொங்கி வருவதைப் போன்ற மெத்தை (பாற்கடல் பொங்கும் அல்லவா)மேல்
கிடந்த கைகேயியை விரைவாக சென்று அடைந்தால் (கூனி)

                                 –