நீங்களும் படிக்கலாம் 51
சமீபத்தில் நான் படித்த புத்தகம் 'தனிமரத்தோப்பு' என்கிற சுயசரித நாவல். இன்னொருவரின் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களைக் கிரகித்து எழுதப்பட்டது.. ஒரு நிகழ்ச்சியின் சேகரமாக எழுதப்படாமல் நாவலாக எழுதப்பட்டுள்ளது. இதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அப்படி எழுதும்போது இந்த நாவலின் தன்மை சற்று குறைபடாமல் இருக்காது. இதை ஒருவருடைய சரிதமாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. உண்மையில் ஜெ.பாலசுப்ரமணியன் என்பவர்தான் இந்த நாவல் உருவாகக் காரணமானவர். அவர் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் நாவலாக மாறி உள்ளது.
இதை நாணு என்ற எழுத்தாளர் விறுவிறுப்பாக எழுதி உள்ளார். ஜெ.பியின் வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத அதிர்ச்சித் தரக்கூடிய உண்மைதான் இந்த நாவல் என்று வைத்துக்கொண்டாலும், இது ஜெ.பியின் பார்வையை மட்டும் வெளிப்படுத்துகிறது. எந்த நிகழ்விற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். ஆனால் இன்னொரு பக்கத்தின் நியாயத்திற்கு நாணு போகவில்லை. குடும்பம் பிரிந்து போகிற அளவிற்குச் சொல்லப்படுகிற காரணமும் ஆழமாக இல்லை.
அதனால் தனக்குத் தெரிந்த ஜெ.பியின் கூற்றுப்படி இந்த நாவலை எழுதி இருக்கிறார் நாணு.
20.02.2024