ஆறாம்விரல்

செ.புனிதஜோதி

கவிஞனின் கரங்களில்
ஆறாம்விரல் கிட்டிவிட்டால்
கற்பனையின் ஊற்றைக்
கவிதையாய்க் கொட்டிடுவான்
கவிக்கோவாய் உயர்ந்திடுவான்

விவசாயின் கரங்களில்
ஆறாம்விரல் முளைத்துவிட்டால்
கட்டாந்தரையைக் கயலாடும்
வயலாய் மாற்றிவிடுவான்
நம்மாழ்வராய் வாழ்ந்திடுவான்

நீதியின் கரங்களில்
ஆறாம்விரல் பிறந்திருந்தால்
வளையாத நீதியை
வனைத்திடுவான்
அம்பேத்கராய் உருமாறியிருப்பான்

ஏழைஎளியோரிடம் கிட்டியிருந்தால்
எழுதப்படிக்கக் கற்றிடுவான்
நேர்மையான பத்திரிக்கையாளனிடம் கிட்டியிருந்தால் விலாக்கிழிய
வினாக்களைத் தொடுத்திருப்பான்

அவரவர்களுக்கான ஆறாம்விரல்
அங்கங்கே முளைப்பதினால்
ஆகாயமும் நிலம்சரியாமல்
நிமிர்ந்தே குடைபிடிக்கிறது

மண்ணில் ஆறாம்விரலின்
பயனால் நலமே விளைகிறது

One Comment on “ஆறாம்விரல்”

Comments are closed.