அழகியசிங்கர்/ஆனால்..

இப்போது
மணி 5.30 ஆகிறது

நான்
ஒரு கவிதை எழுதி ஆகணும்
அதுவும் ஆறு மணிக்குள்!

எழுதி கவிதையை வாசிக்க வேண்டும்
இல்லாவிட்டால்
அழகியசிங்கர் கோபித்துக் கொண்டு விடுவார்!

எதைப் பற்றி
கவிதை எழுத வேண்டும்
என்னைப்பற்றியா?
என்னைச் சுற்றி இருக்கும்
இடத்தைப்பற்றியா?

எப்படியோ
ஒரு கவிதை வேண்டும்

யாரும் கவிதையைப்
பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை
தன்னைப் பற்றி
யோசிக்காதவர்கள்தான்
கவிதையும் எழுதுகிறார்கள்
கவிதை என்ற பெயரில்
சக்கையை எழுதுகிறார்கள்
எல்லோரும் அதைக் கவிதை என்று
ஏற்றுக்கொண்டு
கை தட்டுகிறார்கள்

நான் எழுதுவது
கவிதையா சக்கையா?
எதையும் சரியாகக் கணிக்க முடியவில்லை.