தஞ்சாவூர் ஹரணி கவிதை

000
உயரத்தில் இருக்கும் சூரியன்
வெப்பத் தாக்குதலைப்
பூமியின் மேல்தான் நிகழ்த்துகிறது..

உயரத்தில் இருக்கும் நிலவு
தண்ணொளியைப் பூமியின் மேல்தான்
நிகழ்த்துகிறது..

சில மனிதர்கள் சூரியனைப்போல
சில மனிதர்கள் நிலவைப்போல

உயரத்தில் இருப்பது பெரிதல்ல
செய்வதில்தான் இருக்கிறது பெரியது..

முரணும் முழுமைதான்
முழுமையிலும் இருக்கிறது முரண்
ஒழுங்கற்றது என்பதுதான் அதன்
ஒழுங்காகவும் விதிக்கப்பட்டிருக்கிறது..

வட்டம் சதுரம் முக்கோணம் இவை
ஒழுங்கென்று வகையுள் வைத்தாலும்
ஒழுங்கற்றதை மறைப்பதற்கே..

ஒழுங்கு ஒழுங்கற்றது யாவுமே
இருத்தலின் இன்னொரு வடிவமே
நிறைவு என்பதுவே குறுங்குறையே.