அழகியசிங்கர்/நான் ஏன் கவிதை எழுதுகிறேன்?

எனக்குப் பிடித்தமான
பொழுதுபோக்கு
கவிதை எழுதுவது
அதனால்
எழுதுகிறேன்

கவிதை எழுதியவுடன்
மறந்தும்
விடுவேன்

ரொம்பநாள்
கழித்து
திரும்பவும்
படிக்கும்போது
நானா
எழுதினேன்
என்று ஆச்சரியப்படுத்தும்

கவிதை எழுதி
முடித்தவுடன்
யாரும் என்னிடம்
கவிதை கேட்பதில்லை !
பரபரப்பாகப் படிக்க
யாரும் விரும்பமாட்டார்கள்!

ஆனால்
என் கவிதை
தானாய்
எல்லோரிடமும்
பேசும்!
பறந்து போகலாம்
வா என்று என்னைக் கூப்பிடும்

அழகான
பெண்ணைப் பார்த்தால்
முத்தம் கொடுக்க விரும்பும்

எல்லாம்
கவிதைதான்
வம்பிழுக்கும்!

நான் இல்லை!
நான்
இல்லை!