ப.மதியழகன்/பசி

இவனுக்கு இனியும்
புதையல் கிடைக்கப்
போவதில்லை
கையில் திருவோடும், கழியும்
யார் கொடுத்ததென்று
தெரியவில்லை
கோவில் மணியோசையைவிடவும்
சில்லறை சப்தத்திலேயே
அவன் மனம் லயித்திருக்கும்
உச்சி வெயில் சுட்டெரிக்க
வெறுங்காலுடன் தார் சாலையை
எப்படி கடக்க முடிகிறது அவனால்
இல்லாதவர்கள்
கோவிலுக்கு வெளியேயும்
இருக்கின்றவர்கள்
கோவிலுக்கு உள்ளேயும்
கையேந்துகிறார்கள்
எண்சாண் உடம்பில்
ஒருசாண் வயிற்றுக்காக
பிறரிடம் கையேந்தும்,
அவனுடைய வயிற்றுப்பசியை
கருவறையில் அன்னஅலங்காரத்தில்
அருள்பாலித்துக் கொண்டிருக்கும்
அனுதினமும் நைவேத்யத்தை
உண்டு பசியாறும்
சிவனார் அறிவாரோ?