அழகியசிங்கர்/ஏனோ கவிதை எழுதவில்லை?

மதியப் பொழுதில்
காப்பிக் குடிக்க அமர்ந்திருந்தேன்
டைனிங்
டேபிளில் வீற்றிருந்த
காப்பி டம்ளரில்
இருக்கும் காப்பி கேட்டது
கவிதை எழுதலையா
என்று
தோன்றவில்லை என்றேன்

நீலநிற பீரோவில்
புத்தகங்களை
அடுக்கி வைத்திருந்தேன்
ஏறிட்டுப் பார்க்காத
புத்தகங்கள்
என்னைக் கேட்டன
கவிதை எழுதலையா என்று
மோசம் போய்விட்டேன்
ஏனோ
கவிதை தோன்றவில்லை
என்றேன்
டிவி பார்த்துக்
கொண்டிருக்கும்
மனைவி பக்கத்தில்
அமர்ந்திருந்தேன்

‘இப்போதெல்லாம்
நீங்கள்
கவிதை எழுதவில்லை
போலிருக்கிறதே!’
கேட்டுத் திகைத்துப் போனேன்

எப்படித் தெரியும்?

நீலநிற பீரோவுடனும்
காப்பித் தம்ளருடன்
பேசியதைக்
கேட்டேன் என்றாள்

One Comment on “அழகியசிங்கர்/ஏனோ கவிதை எழுதவில்லை?”

Comments are closed.