நடேசன் பூங்காவில் நடந்த இலக்கியக் கூட்டம்/அழகியசிங்கர்

சரியாக 4 மணிக்கே பூங்காவிற்கு சென்று விட்டேன். அங்கிருந்த காவல் காரரைக் கேட்டேன். üபூங்கா எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை திறந்திருக்கும்,ý என்று. அவர் சொன்னார். காலை 4 மணியிலிருந்து இரவு 9 மணிவரை திறந்திருக்கும் என்று. கேட்க எனக்கு ஆச்சரியம்.

கேட் வாசலில் நின்றுகொண்டு üஒரு கதை ஒரு கவிதை வாசித்தல்ý கூட்டத்திற்கு யார் வருகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு சந்தேகம். வருபவர்களுக்கு எப்படி நான்தான் கூட்டத்தை நடத்துகிறேன் என்பது தெரியும் என்ற சந்தேகம் தான் அது.

அதனால் மேடை மாதிரி உள்ள ஒரு இடத்தல் போய் அமர்ந்து கொண்டேன். மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக இதுமாதிரியான கூட்டத்திற்கு வருபவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரையும் உட்கார வைத்துவிட்டு நான் நின்றுகொண்டு முதல் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். வ வே சு ஐயரின் குளந்தங்கரை அரசமரம் என்ற கதை. இக் கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் கதை என்று கூறினார்கள். நான் சத்தகமாக வாசித்தேன். அதை அப்படியே சோனி ரெக்கார்டரில் பதிவு செய்தேன். கிட்டத்தட்ட நான் அந்தக் கதையைப் படித்து முடித்த உடன் 24 நிமிடங்கள் ஆயிற்று. எனக்கு ஒரே சந்தோஷம். நான் நினைத்துப் பார்க்கவில்லை. சத்தமாக வாசித்தால் இத்தனை நேரம் ஆகும் என்று. கேட்டவர்கள் கைத் தட்டி வரவேற்றார்கள்.

இக் கூட்டத்தில் ஒரு முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும். பேசுபவரும், கேட்பவரும் ஒன்று. எல்லோரும் நெருக்கமாக இருந்ததால் பாகுபாடு தெரியவில்லை. தொடர்ந்து சத்தமாக வாசிக்கும்போது, பூங்காவில் நடப்பவர்கள் எல்லாம் நான் படிப்பதை வேடிக்கைப் பார்த்தபடி சென்றார்கள். இதுமாதிரி பொது இடத்தில் நாம் ஒன்றை நடத்தும்போது நம்மிடம் எதிர்படும் கூச்சம் விலகிப் போகவேண்டும். நான் மெய்மறந்து படிக்கும்போது என்னைச் சுற்றி உள்ளவர்களை கவனிக்கவில்லை. அற்புதமான அனுபவம். அதன்பின் றாலி எழுதிய உமைச்சியின் காதல் கதையைப் படித்தோம். எங்கள் குழுவிலிருந்து பானுமதி என்பவர் அவருடைய கதையைப் படித்தார். பின் என் கவிதையான வினோதமான பறவை என்ற கதையைப் படித்தேன்.

எனக்குள் ஒரு சவால். மீட்சி 27 இதழைக் கொடுத்து கடைசிப் பக்கத்தில் வெளியாகி உள்ள பிரம்மராஜனின் கவிதையைப் படிக்கச் சொன்னேன். படிப்பவர் தடுமாறி விட்டார். யாரும் தடுமாறுவார்கள்.

அந்தக் கவிதையை இங்கு கொடுக்கிறேன்.

கண்களை அகலத்திறந்து கனவு காண்

கண்களை அகலத்திறந்து கனவு காண்

பது யெப்படி யென்று சொல் வாய்

திறந்த தூக்கக் கலக்கத்தைத் தெளிவி

காலை உணவுக் கனவு

தேநீர் நேர மாலை மட்கிய மஞ்சள்

அலையும் அலையைச் சார்ந்த கலையும்

களைத்து மேஜை மீது வீசு

சோதனையிலேயே

மண்டையைப் பிளந்து கொண்டு சாகும் ஏவுகணைகள்

பிரபஞ்ச நடனம்

பிறவிப் பிணி

ஒரு வினாடியின் இருநூறு பங்கில் ஒன்றில்

ஒரு வினாடியின் அறுநூறு பங்கில் ஒன்றில்

ஒரு வினாடியின் நான்காயிரம் பங்கில் ஒன்றில்

கண்ணின் கருமணியின் சமதள ஓட்டம்

சங்கமிக்க வேண்டும்

கனவுப் பதிவு

உள்வெளி ஒளியின்

ஊடுருவல் பொருத்தது

கம்ப்யூட்டரை நம்புவது 17999 தடவைக்கு

மேலும் தவறு

ஒரு புல் இதழ் மீது துளிப் பனியை

ஏதோ ஒரு சமரசமற்ற கோணத்தில் காணாதுபோய்

மீண்டும் ஒன்றிலிருந்து üஞாபகத்தைý அழுத்தி

வரவழைத்து

த்சோ கனவு காணுதலின் இழை அறுபடும்

நானும் பூவை முகரும் ஒரு ரோபோட்டும்

ஸிந்தடிக் புல்வெளியில் சதுரங்கம்

ஆட ஏற்பாடு மரக்குதிரை மனிதன்

மரத்துடல் அரசன் அவனை அதிலும்ட அறிந்த அரசி

அதி வயலட் கதிர் வீச்சால்

இன்றைய விளையாட்டு ஒத்தி வைப்பு நான் திகைக்க

ரோபோட் நகைக்கிறது

மீண்டும் நாளை கண்களைத் திறந்து கனவு காண்

பது எப்படி என்று

கவிதையை எங்கே நிறுத்திப் படிக்க வேண்டுமென்று தெரியவில்லை. ஏன்என்றால் ஒரு முறை படித்தால் சரியாக வராது. சரி படித்து விடலாம். ஆனால் கவிதை என்ன சொல்ல வருகிறது.

நிறைவான கூட்டம் முடிந்து இதோ ஆஸ்திரிலியா இந்தியா கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறேன். தி நகரிலிருந்து நான் வரும்போது எங்கும் கூட்டம் இல்லை. எல்லாம் கிரிக்கெட் மோகம்.

No photo description available.