பானுமதி/எண்’ணங்கள்

எண் ஒன்றைச் சந்தித்தேன்.
சற்றுவிசனத்தில் இருந்தது.
நான் முதல்வன் என் கீழ் புள்ளியை வைத்து
ஆச்சரிய குறி ஆக்கிவிட்டீர்களே!
நல்லது தானே அதிலும் நீ தானே அரசன்
மகிழ்ந்த ஒன்று சொன்னது
இரண்டிற்கு என் மீது வருத்தம்
நான் அதனுடன் இல்லை என்று.
நீதான் கிடைமட்டமாக
அதில் இருக்கிறாயே என்றேன்
சிரித்து மகிழ்ந்தது.
மூன்று என்றேன் வம்பிற்காக
அது தன் வளைவுகளால் பெருமை
அடித்துக் கொள்கிறது என்றது.
ஆனால், நாலைp பார்
முக்கோடுகளும் நானே என்றது
விடாமல், ஐந்து என்றேன்.
கிடைமட்டத்திலும் நெடுமட்டத்தின்
பாதியும் நான் தானே பரவாயில்லை என்றது.
ஆறைப் பற்றி என்ன சொல்கிறாய்?
என்னை சமர்த்தாக கீழே வளைத்துள்ளது
என்று பதில் சொன்னது. ஏழு என்றேன்.
அது நாலைப் போலவே எனது நண்பன் என்றது.
எட்டு, அது பூரணத்தின் சங்கமத்தில்
வீங்கி நிற்கிறது என அங்கலாய்த்தது
ஒன்பது, ஆறை ப் போலவே
என் நண்பன் என்று சொல்லிவிட்டு
மேலும் மேலும் கேட்காதே
பத்தும் பதினொன்றும் பிடிக்கும் என்றது.
உனக்கு என்ன பிடிக்கும் என்று என்னை கேட்டது
வியப்புக்குறி தான் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டேன்.