ஆர் வத்ஸலா/பெண் என்பதால்

30/3/24 அன்று நடை பெற்ற 26 ஆவது இணைய கால கவி அரங்கத்தில் நான் வாசித்த கவிதை :

வசதியுடன் பிறந்தாலும் மறுக்கப் படுகிறது கல்வி
இன்னமும் சிலருக்கு

பட்டங்கள் பெற்றிருந்தாலும் பணிக்குச் சென்று சுயசார்பு பெற
மறுக்கப் படுகிறது அனுமதி
இன்னமும் சிலருக்கு

வசதியானவனுக்கு தனது வாழ்க்கையை அச்சாரம் எழுதி கொடுத்திருந்தாலும்
அவன் வித்தால் பிறந்த தனது குழந்தையின் பசியாற்ற
கையேந்த வேண்டிருக்கிறது அவனிடமே பிச்சைக்காரி போல
இன்னமும் சிலருக்கு

திறன் இருந்தாலும் அதை நிரூபிக்க வாய்ப்பு வேண்டி
போராட வேண்டிருக்கிறது பணியிடத்தில்
கவர்ச்சி காட்டாவிட்டால்
இன்னமும் சிலருக்கு

வாழ்க்கைத் துணை உயிருடன் இருந்தாலும இல்லாவிட்டாலும்
உடன் இல்லாததனால் பல விசேஷங்களில் பங்கேற்க
மறுக்கப் படுகிறது அனுமதி
இன்னமும் சிலருக்கு