தஞ்சாவூர் ஹரணி கவிதைகள்

நவீன விருட்சம் – திரு அழகிய சிங்கர் நடத்தும்
இணையக் காலக் கவியரங்கம் 25 – 29.03.2024

000
கையில் திருவோடு
இருந்தது அவளிடம்..
பிச்சைக்காரி போன்ற
தோற்றம் இல்லை
பிச்சை கேட்பதுபோல
ஒரே கேள்வியைக் கேட்டாள்

யாராவது முகமூடி
இல்லாத முகத்தைத்
தர முடியுமா?

எல்லோரும் விலகி
மௌனமாக நின்றார்கள்
எந்த முகத்தைத் தருவது
என்று குழப்பத்தில்..
அகமும் புறமுமாய்
பல்வேறு முகங்களோடு அவர்கள்
இருந்தார்கள்..

இப்போது அவள்
தன் திருவோட்டிலிருந்து
ஒரு முகத்தை எடுத்து
வெளியே போட்டாள்..
தொடர்ந்து முகங்கள்
வெளியே வந்து
விழ ஆரம்பித்தன
எல்லோரும் ஓட
ஆரம்பித்தனர்
இப்போது..

நவீன விருட்சம் – திரு அழகிய சிங்கர் நடத்தும்
இணையக் காலக் கவியரங்கம் 26 – 30.03.2024

000

எல்லாமும்
எப்போதும்
ஒழுங்காக
இருக்கின்றன..

ஒழுங்கீனமானவர்களின்
ஒழுங்கீனமான
செயல்கள்..
ஒழுங்கீனம்
என்பது தெருவில்
கற்றது இல்லை
கருவில்.