1.
வானத்தை வில்லாக நான் வளைப்பேன்;
மணலையும் கயிறாக நான் திரிப்பேன்;
மயங்காதே இந்த ; பொய்மையில்; மதியற்ற
ஓட்டுப் போடுபவன் கூற்று
2.
நாளேட்டின் நடுவே
வந்த இரண்டாயிரம்
தேர்தல் அன்று இருக்க மாட்டேன் ஊரில்.
இப்போதே பிடி இந்தப் பணம்.
ஓட்டுப் போடுபவர் கூற்று.
3.
ஐநூறு ரூபாய்க்கு ஆயிரம் செலவு
ஆயினும் வேண்டாம்
என்னும் மனையாள்
அடியாட்கள் வருவார்கள் என்னும் பயமுண்டென்றாள்
ஓட்டுப் போடுபவர் கூற்று
4.
கிட்டாது இது மறுபடியும் என்றாலும்
ஒட்டாது ஓட்டு விற்ற பணம்
தட்டாமல் திருப்ப முட்டாளே என்பான்
ஓட்டுப் போடுபவன் கூற்று.
5.
எவரும் அறியாமல் வரும் பணம்
எவரும் அறியாது ஒரு திருவோடு
என்னிடம் ஏது? ஏந்துபவர்க்குக் கொடு
ஓட்டுப் போடுபவன் கூற்று
6.
வீதி வழி கும்பிட்டு வந்தார்;
வீணே வாக்கு பல தந்தார் ;
காணமல் போனார்; ஓட்டா போடுவேன்;
ஓட்டுப் போடுபவன் கூற்று
7.
சூரனாய் வாக்கு பல தந்து
தீரனாய் போக்குக் காட்டி, வஞ்சகமாய்
நெஞ்சில் நஞ்சு வைத்திருப்போருக்கு,
நோட்டாதான்
ஓட்டுப் போடுபவன் கூற்று
6-4-2024