மதுவந்தி/கடிகாரத்தை முழுங்கிய பின்…..

இன்று விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் நான் வாசித்த எனது முதல் கவிதை.

கடிகாரத்தை முழுங்கியபோது
அறிந்திருக்கவில்லை
என்னைத் தவிர
வேறு எவரேனும் கூட
அதில் எழுப்பொலி*
அமைத்து
வைத்திருக்கலாம் என.

எழுப்பொலியெழுப்ப
உடனே வேலை
துவங்குபவர் போல ஆனது
என் செயல்கள்.

படியிறங்கிக் கீழே வந்து
கதவைத் திறக்குமுன்
அவசரமாய் மீண்டும்
மாடிப்படி ஏறுகிறேன்.

பேசிக் கொண்டிருக்கையிலே
நடுவில் நிறுத்தி
அறைக்குள் எதையோ தேடுகிறேன்.

வீடு விட்டு வீதி வந்து
சாலையோரம் நின்று
நெடு நேரம் யோசிக்கிறேன்
எங்கே போக வேண்டும்
என்ன செய்ய வேண்டுமென.

என் செவிகளில் மட்டுமே
ஒலிக்கிற அந்த எழுப்பொலியை
நிறுத்த இயவில்லை.

எழுப்பொலியை
நிறுத்தவோ
விழுங்கிய கடிகாரத்தை
எடுக்கவோ
சாத்தியமறிந்த மருத்துவரைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்..

( * அலாரம் – எழுப்பொலி).

                     . 19.04.23.

One Comment on “மதுவந்தி/கடிகாரத்தை முழுங்கிய பின்…..”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன