வாசிப்பு/ஆர். வத்ஸலா

உலக புத்தக தினமான 23/4/24 அன்று நடந்த 44 ஆவது இணைய கால கவியரங்கத்தில் ”” எனும் தலைப்பில் நான் வாசித்த இரண்டு கவிதைகள்:

வாசிப்பு 1

புனைவு புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம்
எனக்கு
பள்ளிப் பருவத்தில்

பாடப் புத்தகத்தைத் தவிர
வேறு எதைத் தொட்டாலும்
தொடங்கும் அம்மாவின் ஆலாபனை

அப்படியும்
வாசித்து விட்டேன்
எப்படியோ
சூடாமணியின்
“விடிவை நோக்கி”யையும்
கல்கியின்
“பார்த்திபன் கனவை”யும்

அவற்றில்
ஒன்று
வாழ்க்கையின் முச்சந்தியில்
சரியான
ஆனால் கடினமான
பாதையை தேர்வு செய்யும் துணிவைத் தந்தது

மற்றொன்று உச்சி வெயிலில் நடக்கும் போதும்
இமயத்தின் பனியில் நனையும் நாளைப் பற்றி
கனவு காணக் கற்றுக் கொடுத்தது

வாசிப்பு 2
ஆர். வத்ஸலா

வாசிக்க ஆசை தான்
ஆனால் பட்டப் படிப்பில்
ஒரு சில புத்தகங்களின் கனமும் அளவும்
அவற்றைக் கற்பித்த ஆசிரியரின் தொனியும்
புத்தகங்களை கண்டதும்
திறந்த விழிகளுடன்
தூங்கக் கற்றுக் கொடுத்து விட்டன
என் செய்வேன்?

23/4/24 #உலக புத்தக தினம்

One Comment on “வாசிப்பு/ஆர். வத்ஸலா”

Comments are closed.