அழகிய சிங்கரின் 44 ஆவது இணைய காலக் கவியரங்கம்- 23/04/2024
வாழ்க்கை என்ற புத்தகத்தில்
மனித எழுதுகோல்
அனுபவ மை சேர்த்துப்
பக்கம் பக்கமாக நிரப்புகிறது.
சில பக்கங்கள் பசுமையாய்
சில செந்தணலாய்
சில நிர்மல வெண்மையாய்
நிறம் மாறி நிறம் மாறி
எழில் கூட்டுகின்றன.
சில பக்கங்கள் வெறுமையாய்
சில செழுமையாய்
சில ஏழ்மையாய்
எழுதப் படுகின்றன.
சில பக்கங்களில் எழுத்துக்கள்
ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி
இடம் பிடித்து மகிழ்கின்றன.
சில பக்கங்கள் கசக்கப்
படுகின்றன.
சில எரிக்கப் படுகின்றன.
சில கிழிக்கப் படுகின்றன.
இருந்தாலும் என்றும்
எழுதுவது என்னவோ
நிற்பதில்லை.
புத்தகம் முடியும் தருணம்
ஏதோ ஒரு நீதி
எங்கோ ஒளிந்து கொண்டு
உண்மை பேசத் துணிகிறது.
என் புத்தகம் மூடப் படுகையில்
சில பக்கங்களில்
எனது கவிதைகள்
உயிருடன் ஓடி விளையாடிக்
கொண்டிருக்கும்.
நீங்கள் வாசிக்கையில்
எழுத்துக்குள்
ஒளிந்து கொண்டு
நான்
நேசக்கரம் நீட்டிடுவேன்.
உயிர்த்து
உறைந்திருப்பேன்!
அருமை
உங்கள் அன்பை எடுத்துக் காட்டும் கவிதை வரிகள்.