தஞ்சாவூர் ஹரணி கவிதைகள்

நாள் 25.4.2024

இல்லாமல் போயா…

வயதாகிவிட்டது
அவர்களைப் பேசாதீர்கள்
பயனில்லை
அவர்களால் எதுவும்
செய்யவியலாது
எதுவும் புரியாது
அடித்தாலகூடத் திருப்பி அடிக்க முடியாது
செத்தப் பிணம்
என்கிறார்கள்…

வயது காலத்தில்
மற்றவர்களை இவர்கள்
செத்தப் பிணமாக்கிய
கணக்கை எப்போது தான்
தீர்ப்பது? எப்படித் தீர்ப்பது?

யேசுவாகியா?
புத்தனாகியா?
அல்லாவாகியா?

இல்லை
இல்லாமல்
போயா?


நாள் 27.4.2024

சொற்பருந்துகள்

பறந்துகொண்டிருந்த புறாக்களில்
ஒன்றை வீழ்த்தியது பருந்து..

வீழ்த்திய புறாவின் அனைத்து
இறகுகளையும் பிய்ததெறிந்தது
பருந்து..

எறிந்தபின் புறாவை உண்ணத்
தொடங்கியது பருந்து..

புறா அமைதியின் குறியீடு

அமைதியைத்தான் பருந்து
கொத்திக் கிழித்துத் தின்று
கொண்டிருக்கிறது..

இப்படித்தான் உலகமெங்கும்
பலரின் மன அமைதியைச்
சொற்பருந்துகள் குத்திக் கிழித்து
உண்கின்றன நாள்தோறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன