
அழகிய சிங்கரின் என்பா
என்பா சரமாக இன்று
🪷
நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்தது மழை.
காலையில் தகதகவென மின்னும் சூரியன்.
மாலையில் குளிர் தென்றல் மாருதம்.
இயற்கையின் விளையாட்டு இதுவே.
🪷
தரு ஒன்று சாய்ந்தது தரையில்;
நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்திடும் மழை.
முரசின் ஒலிக்கு ஈடாய் எதிரொலியென,
நிற்கும் நிலம் பிளந்தது.
🪷
கொடையென நினைத்தேன்; கோடை மழையை.
“வரட்டும்; குவலயம் குளிரட்டும்” மகிழ்ந்தேன்!
நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்திடும் மழை;
மேற்கூரை சரியும் வரை.
🪷
தாமிரபரணி கரை புரண்டு ஓட,
வீதி எல்லாம் நதி நீர்.
செய்வதென்ன என்று அறியோம்; நள்ளிரவில்.
சூரைக்காற்றுடன் சுழன்றடிக்கும் மழை.
🪷
நள்ளிரவில் சூரைக்காற்றுடன் சுழன்றடிக்கும் மழை.
இருண்ட வானத்திலிருந்து கொப்பளிக்கும் சரமழை
மிரண்ட மக்கள் இங்கும் அங்கும்
ஓடுவதைக் காணும் அவலம்.
