
வாஸ்கோ போப்பா கவிதைகள்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
என் தலைக்குள் சும்மா எட்டிப்பார்
எனது என்ணங்கள் உனது கன்னத்தைக் கீறுதலில் மேம்பட்டவை
என் முன்னால் சும்மா வந்து நில்
எனது கண்கள் உன்னை வெடுக்கென்று உடைப்பதில் மேம்பட்டவை
சும்மா உன் பெரிய வாயைத் திற
எனது மௌனம் உனது தாடைகளை உடைப்பதில் மேம்பட்டது
சும்மா நீ யார் என்று எனக்கு நினைவுபடுத்து
எனது ஞாபகம் உனது பாதங்களுக்கடியில் ஒரு குழியைத் தோண்டுவதில் மேம்பட்டது
இவ்வாறாகவே நம்மிடையே விஷயங்கள் இருக்கின்றன
——-
1
எனது கந்தலை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடு
எனது தூய கனவின் கந்தல்கள்
பட்டுப் புன்னகைகளாலானவை
முன்னறிவின் நீண்ட கோடுகளுடையவை
எனது மென்கயிறு போன்ற தசை நாண்கள்
எனது நம்பிக்கையின் போல்க்கா நடன புள்ளிகள் கூடிய கந்தல்கள்
காமத்தின் ஜரிகை வேலைப்பாடு கொண்டவை
காலிக்கோ கண்ணோட்டமுடையவை
எனது முகத்திலிருந்து உரிக்கப்பட்ட தோல்
எனது கந்தலை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடு
நான் உன்னை நயமாகக் கேட்கிறேன்
2
கவனி பிறழ்வின் உருவே
உனது வெள்ளைக் கைக்குட்டையை
எடுத்துக்கொண்டு போய்விடு
நமக்கு ஒருவரை ஒருவர் தெரியாதா என்ன
குழந்தைப்பருவத்திலிருந்து ஒன்றாக இருந்தது
ஒரே வட்டிலில் இருந்து நக்கிக் குடிப்பவர்களாக
ஒரே படுக்கையில் தூங்கியது
தீக் கண்ணுடைய கத்தியாகிய உன்னுடன்
இந்த விசித்திர உலகில் நடந்தது
சட்டையினுள் பாம்பாகிய உன்னுடன்
கவனி இரட்டைவேடத் துரோகியே
உனது வெள்ளைக் கைக்குட்டையை
எடுத்துக்கொண்டு போய்விடு
எதற்காக ஒருவருக்கொருவர்
பொய் சொல்ல வேண்டும்
——
3
நான் உன்னை உப்புமூட்டை தூக்கமாட்டேன்
நீ எங்கே சொல்கிறாயோ அங்கே உன்னை
எடுத்து செல்ல மாட்டேன்
நான் தங்கத்தில் காலணி அணிந்திருந்தாலும் கூட
நான் காற்றின் ஊர்தியின் மூன்று சக்கரங்களில்
சேணத்தால் பிணைக்கப்பட்டிருந்தாலும் கூட
நான் ஒரு வானவில்லோடு கடிவாளமிடப்பட்டிருந்தாலும்கூட
எனக்கு கையூட்டு கொடுக்க முயற்சிக்காதே
எனது பாக்கெட்டில் என் பாதங்கள் இருந்தால் கூட
அது ஒரு ஊசியின் வழி முடிச்சாக கோர்க்கப்படிருந்தாலும் கூட
அல்லது அது ஒரு குச்சியாக செதுக்கப்பட்டிருந்தாலும் கூட
நான் செய்ய மாட்டேன்
என்னை பயமுறுத்த முயற்சிக்காதே
என் கனவில் கூட
நான் வறுக்கப்படமாட்டேன்
அதிகமாக வறுக்கப்பட மாட்டேன்
பச்சையாகவோ உப்பிட்டோ
உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டே இருக்காதே
அது வேலைக்காகாது, நான் செய்யமாட்டேன்
——-
4
எனது சுவரெழுப்பப்பட்ட வரம்பின்மையிலிருந்து
எனது இதயத்தைச் சுற்றி நடனமிடும் நட்சத்திரங்களின்
வளையத்திலிருந்து
எனது ஒரு கவள சூரிய ஒளியிலிருந்து
வெளியேறு
எனது ரத்தத்தின் கும்மாளமிடும் கடலிலிருந்து
எனது ஓட்டத்திலிருந்து எனது வடிந்திறங்குதலிலிருந்து
எனது தப்பவழியில்லாத மௌனத்திலிருந்து
வெளியேறு
வெளியே போ என்று சொன்னேன் வெளியே போ
எனது வாழும் குழியிலிருந்து
வெற்றாக என்னுள் இருக்கின்ற தந்தை மரத்திலிருந்து
வெளியேறு
வெளியே போ என்று நான் எவ்வளவு நேரம் கத்த வேண்டும்?
துண்டு துண்டாய் வெடித்துச் சிதறும் என் தலையிலிருந்து வெளியே போ
வெளியே போ உண்மையாக வெளியே போ
——
5
நீ க்யூப்பை* பொம்மையின் கருத்துக்களை புரிந்துகொள்கிறாய்
நான் அவற்றை என் ரத்தத்தில் குளிப்பாட்டுகிறேன்
என் தோலின் கந்தலாடையில் அவற்றுக்கு ஆடையணிவிக்கிறேன்
என் முடியினால் அவற்றுக்கு ஊஞ்சல் கட்டுகிறேன்
எனது முதுகெலும்பிலிருந்து அவற்றுக்கான பொம்மை வண்டிகளை,
சறுக்கு மரங்களை எனது புருவங்களிலிருந்து
அவற்றுக்காக எனது புன்னகைகளிலிருந்து பட்டாம்பூச்சிகளையும்
காட்டு மிருகங்களை எனது பற்களிலிருந்தும்
வேட்டையாடி காலத்தைக் கொல்ல உண்டாக்குகிறேன்.
இது என்னமாதிரியான விளையாட்டு, எப்படியிருப்பினும்.
———-
*Kewpie என்ற பெயர் , சிற்றின்பக் காதலின் ரோமானியக் கடவுளான க்யூபிடிலிருந்து பெறப்பட்டது. Kewpie என்பது கார்ட்டூனிஸ்ட் ரோஸ் ஓ’நீல் என்பவரால் காமிக் ஸ்ட்ரிப் பாத்திரங்களாகக் கருதப்பட்ட பொம்மைகள், உருவங்களின் பிராண்ட் ஆகும்
——-
6
உனது ரத்தத்தின் வேரையும் மணிமுடியையும் சபித்துவிடு
கூடவே உன் வாழ்க்கையின் அனைத்தையும்
உனது மூளையின் ஒவ்வொரு வறண்ட படிமத்தையும்
உனது விரல்நுனிகளில் எரியும் மனப்போக்கை மாற்றிக்கொள்ளும் ஓவ்வொரு கண்ணையும்
நீ எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியையும்
நீ உனது மூன்று கொதிகலன்
கிண்டிகளின் எரிச்சலூட்டும்
தண்ணீரில் மூழ்குவாயாக
மூன்று அடுப்புகளின் சகுனத் தீயிலும்
பெயரும் பாலுமற்ற மூன்று குழிகளிலும்
பனிக்கட்டி குளிருடன் தொண்டையில் மூச்சு
இடது முலைக்காம்பிற்குக் கீழாகக் கூழாங்கல்
பறவை சவரக்கத்தி கூழாங்கல்லில்
கறுப்பிலும் கறுப்பான கறுப்புப்பறவைகளை
இன்மையின் வனத்திற்குள் தள்ளிவிடு
பசித்த ஆரம்பங்களின் கத்திரிகோல்களுக்கு
எனக்கு நன்றாகத் தெரிந்த சொர்க்கத்தின் கருவறைக்கு
உனது விதையின் சாற்றினையும் அதன் ஒளிர்வினையும் சபித்துவிடு
எனது வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் இருளையும் புள்ளியையும்
கூடவே உலகிலுள்ள அத்தனையையும்
—-
7
எனது கந்தல் கிளிசல்கள் என்னவாயின
நீ அவற்றைத் திருப்பித் தராவிட்டால்,
தரமாட்டாய்
உனது புருவங்களை நான் கரிக்கிவிடுவேன்
என்றென்றும் கண்ணுக்குத் தெரியாமல் நீ இருக்க முடியாது
பகலையும் இரவையும் உனது கபாலத்துள் கலந்துவிடுவேன்
நீ உன் தலையில் அடித்துக்கொண்டு என் பின் வாசலுக்கு வந்து சேர்வாய்
உனது பிறாண்டும் விரல் நகங்களை நான் நறுக்கிவிடுவேன்
நீ எனது மூளையினுள்ளாக அதன் பிறகு பாண்டி விளையாட மாட்டாய்
உனது எலும்புகளிலுள்ள மூடுபனியை நான் வேட்டையாடுவேன்
உனது நாக்கின் விஷத்தை உறிஞ்சிக் குடிப்பேன்
நான் என்ன செய்வேன் என்பதை நீ பார்க்கத்தான் போகிறாய்
—-
8
அப்படியாக நாம் இருவரும் ஒவரை ஒருவர் காதலிக்கவேண்டும் என்று விரும்புகிறாய்
நீ என்னை என் சாம்பலிலிருந்து உண்டாக்கலாம்
எனது வயிற்றின் குப்பை சிரிக்கிறது
எனது சலிப்பிலிருந்து என்ன மிஞ்சியதோ அது
உன்னால் முடிந்ததைச் செய்யலாம் பொம்மை முகமே
எனது சிறிய ஞாபகத்தின் முடியைப் பறித்துப்பிடிக்க முடியும்
எனது காலிச் சட்டையின் இரவை அணைத்துக்கொள்
எனது எதிரொலியை முத்தமிடு, முத்தமிடு
உனக்கு எப்படிக் காதலிப்பது என்று கூடத் தெரியாது
——
9
ஓடு பிறழ்ந்தவளே
நமது காலடித்தடங்கள் ஒன்றையொன்று கடிக்கின்றன
நமக்குப் பின்னாலுள்ள தூசியில்
நாம் ஒருவருக்கொருவர் ஆனவர் இல்லை
நான் உன் பனிக்குளிர்மையினூடே பார்த்துவிடுகிறேன்
உனது மட்டுமீறியதன்மைகளை நடத்திக்காட்டு
இது ஒன்றும் பெரிய விளையாட்டு இல்லை
நாம் ஏன் நம் கந்தைகளைக் கலந்துகொண்டோமோ
அவற்றைக் கையளித்துவிடு அவற்றிடம் உனக்கு என்ன வேண்டுமோ அதை
அவை உனது தோள்களில் வெளிறிக்கொண்டிருக்கின்றன
பரப்பரப்பாக அவற்றைக் கையளித்துவிட்டு இல்லாத உனது இடத்துக்குப் போய்விடு
ஓடு பிறழ்ந்தவளே பிறழ்ந்தவனிடமிருந்து ஓடிவிடு
உனக்குக் கண்களில்லையா
இங்கேயும் ஒரு பிறழ்ந்தவன் இருக்கிறான்.
——
10
உனது நாக்கு கறுப்பாகக் கடவது
உனது நண்பகல் உனது நம்பிக்கை
எல்லாம் கறுத்துப் போக எனது சில்லிடுதல் மட்டுமே வெள்ளையாக
எனது ஓநாய் உனது தொண்டையில்
புயல் உனது படுக்கையாகக் கடவது
எனது பயம் உனது தலையணையாக
அகண்ட புல்வெளி உனது தூக்கமின்மையாக
உனது ஒவ்வொரு பருக்கையும் தீ ஆகக் கடவது
உனது பற்கள் மெழுகாக
பெருந்தீனீயே வா, வேண்டிய அளவு அனைத்தையும் சவை
உனது காற்றை ஊமையாக்கு, உனது நீரை, உனது மலர்களை
எல்லாமே நாக்குக் கட்டப்பட்டதாக இருக்கட்டும்
எனது அரைக்கும் பற்கள் மட்டுமே இன்னும் ஓசைஎழுப்புவதாக
எனது கழுகு உனது தொண்டையில்
உன் அம்மாவுக்கு ஒரு பயங்கரம் குறைந்தது என்பதாக.
——
11
நான் உன் முகத்தை என் முகத்திலிருந்து துடைத்துவிட்டேன்
உனது நிழலை என் நிழலிலிருந்து கிழித்தெறிந்தேன்
உன்னுள் இருக்கிற குன்றுகளை சமனமாக்கினேன்
உனது சமவெளிகளைக் குன்றுகளாகக் கசக்கினேன்
உனது பருவங்களைச் சண்டையிடவைத்தேன்
உன்னிடமிருந்து பூமியின் மூலைகளை உதைத்துத் தள்ளினேன்
உன்னைச் சுற்றியிருந்து எனது வாழ்வின் பாதையைக் கட்டிவைத்தேன்
எனது அதிகமும் வளர்ந்த சாத்தியமற்ற என் பாதையை
இப்போது நீ என்னைப் பார்க்க முயற்சி செய்து பார்.
——
12
உனது இறப்பற்றவைகளின் இனிப்புப் பேச்சு போதும்
உனது மிட்டாய் துணுக்குகளை
நான் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை
போதும் போதும் எல்லாமே போதும்
நான் எனது இறுதியினை போதுமான அளவு சொல்லுவேன்
எனது வாய் பூமியால் திணிக்கப்பட்டிருக்க
எந்து பற்களை நறநறத்தபடி
கபாலம் விழுங்குபவரை நான் வாயை மூடுவேன்
இன்றைக்கும் என்றைக்குமாய் மூடிவிடுவேன்
நான் நான் மட்டுமாகவே எழுந்து நிற்பேன்
வேர்க்கிளையோ மணிமுடியோ இல்லாமல்
நான் என்மேலேயே சாய்ந்து நிற்பேன்
எனது சொந்த முகடுகளின் மேல்
நான் உன்னுள் சொருக்கப்பட்ட நடுகழியாக இருப்பேன்
உனது விருந்துகளைக் கெடுப்பவனாக
உனது குழப்பமான தலைக்குள்ளாக
அவ்வளவுதான் என்னால் இயன்றது
நீ என்றுமே திரும்பி வாராதிருப்பாயாக.
——
13
என்னை முட்டாளாக்காதே பிறழ்ந்தவளே
உனது கழுத்துப்பட்டிகைக்கு அடியில் கத்தியை ஒளித்து வைத்திருந்தாய்
கோட்டினைத் தாண்டி வந்து என் தள்ளிவிட்டாய்
விளையாட்டைக் கெடுத்தது நீ
நீ எனது சொர்க்கங்கள் தலைகீழாக விரும்பினாய்
என் தலைமேல் சூரியன் உடைய விரும்பினாய்
எனது கந்தலாடைகள் சிதறிப்போகவும் விரும்பினாய்
இன்னொரு பிறழ்ந்தவனுடன் எப்போதுமே முட்டாள் விளையாட்டு விளையாடாதே
எனது கந்தல்களை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடு
நான் உன்னுடையதைத் திருப்பித் தந்துவிடுகிறேன்
——
Photo : The Lovers II, 1928 by Rene Magritte

அதிஅற்புதமான கவிதை