நாகேந்திர பாரதி/ஒத்தையடிப் பாதை

ஆரம்பத்தில் கிளைகள் பல பிரிந்தாலும்
அடுத்தடுத்த அடி விழுந்து அமைந்த பாதை

வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதை
கண்மாய் மேட்டினிலே ஒரு பாதை

காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலே
குறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை

புல்லும் பயிரும் அமுங்கிப் போய்
புதிதாக உருவெடுக்கும் அழகுப் பாதை

நடந்து போன மனிதர்களின் வாழ்க்கையிலே
கடந்து போன காட்சிகளும் எத்தனையோ

பாலகனாய் நடந்தவனின் பாதம் பட்டு
பழக்கத்தில் குழைந்திட்ட பாசப் பாதை

சேர்ந்து போன தம்பதியர் சிரிப்புப் பேச்சில்
சில்லென்று சிலிர்த்திட்ட சின்னப் பாதை

விவசாயி தலைச் சுமையைக் கால்கள் வாங்கி
இறக்கிட்ட இறுக்கத்தில் இழந்த பாதை

வயோதிகம் தாளாமல் தள்ளாடி
வருகின்ற முதியோரைத் தாங்கும் பாதை

பருவங்கள் பலவாக மாறி மாறி
வந்தாலும் அங்கேயே அந்தப் பாதை