இரயிலின் சன்னலோரப்பபயணம்

செல்வி பிரகாஷ்

சன்னலோரப்பயணம்

சாயுங்கால நேரம்

மழைப்பொழியும் தவிப்பில்

மேகங்கொண்ட வானம்.

சாய்ந்தபடி செல்லும் என்

சர்க்கரையின் எண்ணம்.

காற்று முகத்தில் மோத

தோற்று வியர்வையோடும்.

சரசரக்கும்சத்தம்

படபடத்த விழிகள்

சலசலத்த என்னை

கிளுகிளுக்க வைக்கும்.

கன்னம் தழுவும் காற்றோ

கதைகள் நூறு சொல்லும்.

கவிதை பேசும் விழிகள் அதில்கண்ணீர் அடித்துச்செல்லும்.

விட்டுச்செல்லும் தாயை

விரல்பற்றவரும் சேய்போல்

வட்ட நிலாத்தொடரும் அதன்

விட்டகலா மோகம்.

பச்சைப்பசேலென்ற வயலும்

பறவைப்பறக்கும் செயலும்

சிறகு முளைக்கச்செய்து

சிந்தனையைப்பறக்கச்செய்யும்.

ஓடிவரும் மேகம் அதில்

கூடிவரும் உருவம்

மூச்சிறைத்துப்பார்த்து

மீண்டுமெனைத்தொடரும்.

தனிமை படுத்தியென்னை

தழுவும் இயற்கையன்னை

கண்ணால்பார்த்தமட்டில்

கதைகள் சொல்லிச் சிரிக்கும்.

வாழ்க்கையென்ற பயணம்

புழுங்கிச்சென்றே நகரும்

சன்னலோரப்பயணம்

சந்தோஷத்தில் உறையும்.

One Comment on “இரயிலின் சன்னலோரப்பபயணம்”

Comments are closed.