
இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்த கவிதைகள்
ஒத்தைப் பனை மரம்
கள்ளு இறக்கிய காலத்தில்
காத்துக் கிடந்தவர் பல பேர்
கதிர் அறுத்த காலத்தில்
கஞ்சி குடித்தவர் பல பேர்
காஞ்சு போன காலத்தில்
மட்டை உரித்தவர் சில பேர்
உறிஞ்சு விழும் சட்டத்தில்
முதுகு சொறிந்தவர் சில பேர்
கூட இருந்த பனையெல்லாம்
விறகாகவும் வீடாகவும்
ரோடு தெரிகிறது
பஸ் சப்தம் கேட்கிறது
பஸ்சுக்குள் ஒரு பையன்
கை அசைப்பது தெரிகிறது
ஒத்தைப் பனைமரம் இன்னும்
எத்தனை நாளைக்கு
தோட்டத்துப் பூ
மணத்தைப் பரப்பி விட்டு
மண்ணுக்கு வா என்றது
மண்ணில் கிடந்த சருகு ஒன்று
இன்னும் கொஞ்ச நாள்
இருந்துவிட்டு வருகிறேன் என்றது
இன்று பூத்த பூ ஒன்று
அது காற்றின் கையிலும்
அதோ அந்தக் கடவுள் கையிலும்
என்றது சருகு
அந்தக் கடவுள் கையில்
பூக்கூடையோடு
வந்து கொண்டு இருந்தார் .
