மீ. விசுவநாதன்/ “கிளிகள் கேட்ட மனித வரம்”

அந்தக் கோவிலின் கோபுரத்தில்
அழகாய் இரண்டு பசுங்கிளிகள்
நந்த வனத்திடைப் பூப்பறித்து
நாதன் நம்பி தலைசூட்டி
“இந்தப் பிறப்பினை நலம்செய்தாய்
இனியோர் பிறப்பில் மனிதகுலம்
வந்து பிறந்திட அருள்செய்யும்”
வரத்தைக் கேட்டு நின்றவுடன்

“உனக்கேன் இப்படி ஆசையென”
உடனே கடவுள் கேட்கின்றான் !
“எனக்காம் பலனிதைக் கேட்கவில்லை
இனிய தமிழிலே கவிசெய்து
உனக்கே மாலைகள் சூட்டிடுவேன்
உலகம் உய்யத் தொண்டுசெய்வேன்
தனக்கே என்கிற அககிழங்கை
தர்மம் செய்தே அகற்றிடுவேன்.”

என்ற கிளிகளின் வார்த்தைக்கு
இறைவன் இரங்கிக் கருணையுடன்
“உன்போல் உயரிய எண்ணந்தான்
உயிரின் சிறப்பைக் காக்கிறது
அன்பால் அணைத்திட வேண்டுமெனும்
ஆசை கொண்ட உன்னுள்ளே
என்றும் இருந்திடும் அடியேனாய்
இருப்பேன்” என்றான் இறைவன்தான்.

(இன்று-06.10.2024- நவராத்ரி நான்காம்நாள்)

One Comment on “மீ. விசுவநாதன்/ “கிளிகள் கேட்ட மனித வரம்””

Comments are closed.