
இரண்டு தேவதூதர்களும்
திகைத்துநிற்கிறார்கள்.
அவர்களது போதனைகளை
விண்ணைக்கிழித்துச்செல்லும்
அனங்கன்/ஏவுகணைகள் கேலிக்குள்ளாக்குகின்றன.
பாவங்களுக்கு மனிதன் பயப்படவில்லை….
உயிர்தெழுந்தாலும் ஒன்றும்
ஆகிவிடப்போவதில்லை.
புனிதநூல்கள் அனுதினமும்
வாசிக்கப்பட்டாலும்….
அதன்உண்மைத்தன்மை
விளங்கிக்கொள்ளப்படாமலே
இன்றுவரை இருக்கிறது.
ஆலயங்களை ஆயுதங்கள்
ஒருபோதும் வணங்கிச்செல்வதில்லை.
தனிமனிதர்களின் ஆணவம்
தலைமுறைகளைப் பொசுக்குகிறது.
மதம் மனிதர்களை தின்று
செரிக்கும் விலங்காக இருக்கிறது.
காரணம் அறியாது உயிர்விடும்
மக்களுக்காக யாரும் கண்ணீர்சிந்தப்போவதில்லை.
உங்களுக்கு ஒன்றும் நடக்காதவரையில்
உள்ளூர்ச்செய்திகளோடு…
உலகச்செய்தியாய் அனைத்தும்
கடந்துபோய்விடும்.
மிஞ்சப்போகும் சாம்பலில் ஒரு
புல் தழைக்க எத்தனை
தலைமுறை காத்திருக்கவேண்டுமோ….?
♦
