நாகேந்திர பாரதி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள்

  1. கொலு பொம்மை ரகசியம்

நிற்கும் பொம்மைகளிடம்
கதைகள் இருக்கின்றன

படுக்க வைக்கப் படும்போது
பகிர்ந்து கொள்ளப்படும்

மண்ணாக இருந்த காலத்தின்
மகிழ்ச்சிக் கதைகள்

கேட்கும் அம்மாவுக்கும்
கண்கள் கசியும்

மணமான காலத்திற்கு
முன்பிருந்த நிலை நினைந்து

  1. இரக்கம்

ஓரக் குடை வழி
ஒழுகும் மழைநீரில்

பேண்டு நனைந்திட
பிழைத்த சட்டையோடு

காற்றில் பறக்காமல்
குடையை இறுக்கியபடி

ஓரத்தில் நிற்போர்க்கு
இரக்கப் பார்வையோடு

விரைந்து நடக்கையில்
விரல் ஒன்று நீளும்

குடைக்குள் இடம் கேட்கும்
குறியீட்டை ஒதுக்கி விட்டு

விரையும் வேகத்தில்
கரையும் இரக்கம்

  1. சொல்லுக சொல்லை

விழுந்த சொல் ஒன்று
முளைத்து எழுந்து
கிளைகள் பரப்பி
இலைகள் முட்களாய்க்
குத்தவும் செய்யலாம்

விழுந்த சொல் ஒன்று
பூத்துக் குலுங்கி
வண்ணம் காட்டி
மணத்தைப் பரப்பி
மயக்கவும் செய்யலாம்

  1. பரிமாறும் அன்பு

அவனுக்குப் பிடித்தபடி
அளவான புஷ்டியோடும்
அளவான புளிப்போடும்
தோசையும் துவையலும்

சாப்பிட்டு முடிந்தபின்பு
தட்டைக் கழுவி விட்டு
காய்கறி நறுக்குவதில்
கணவனின் நன்றி

One Comment on “நாகேந்திர பாரதி கவிதைகள்”

Comments are closed.