மஹேஷ்
மழையில் அலையும்
வண்ணத்துப்பூச்சி
வர்ணம் அழியா
மாயக்கோலம்.
இமைகள் வருடும்
ஈரக்காற்றில்
கவலை கறைய
கணங்கள் உறையும்.
காங்க்ரீட் குடைகீழ்
நடுங்கி ஒதுங்கும்
நாய்க்குட்டி தொட்டு
சிரிக்கும் சிறுமி..
தெருவில் பெருகும்
ஏரித்தண்ணீர்
காணாமல் போன
கால்வாய் தேடும்.
கவிதைகள் போல்
காட்சிகளே கிடக்க
வீணாய்
எழுத்தில் கடத்தி
தோற்கும்
நானும்.

, அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
வர்ணம் அழியா மாயக் கோலம் கவிதை வரிகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் கவிஞரே!
வருணனைகள் அழகு!
நீண்ட காலத்திற்குப் பின் உன்னுடைய சந்தத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் மழைத்துளியைப் போல் இதமாக..
ப்ரியமாய்த் தட்டிக்கொடுத்த நண்பர்களுக்கும் பதிவிட்டு
ஊக்கப்படுத்திய அழகியசிங்கர் அவர்களுக்கும்
வணக்கங்களும் நன்றியும்.. – மஹேஷ்.
மழையையும், வண்ணத்து பூச்சியையும், நாய்க் குட்டி தொட்டு சிரிக்கும் சிறுமியையும் சொற்களால் கட்டி ‘கவிதையாக’ கடத்தப்பட்டால் அந்த சொல்லோவியம் அழகாகத்தானே இருக்க முடியும்?
தங்கள் நண்பரின் கதைகள் போல் உமது கவிதையும் கண்முன் காட்சிப் படுத்துவது அருமை.
அருமை
மழையில் நனைந்த வண்ணத்துப்பூச்சி ஒரு புன்முறுவல் போல கடந்தது போல் இதமான கவிதை ..தேன்சிட்டுக்கு தேன் பருககுடுத்த மாதிரி ..அருமை …