
வானவெளி கொண்டாடும் தீபாவளி!
நரகாசுரன் வதத்தைக் கண்ட நாள்தொட்டு
தீபாவளிதனைக் கொண்டாட வானம்
தவறுவதேயில்லை.
இங்கே நடக்கும் சகலத்துக்கும்
சாட்சி பூதம் இந்த வானவெளி!
இலட்சம் இலட்சமாய் அதற்கு
நட்சத்திர விழிகள்.
எதுவுமதன் பார்வையினின்று
தப்புவதில்லை.
மேகங்களைத் திரட்டியே மழையாய்
தன் மகிழ்ச்சிதனைப் பொழிகிறது.
சோகம் வெளிப்படுவதும் அவ்வாறே!
தந்தையின் கோபத்தை தடுத்தாளும்
தாய்போல்
விரிவானமும் மேகக் குடைகள் விரித்தே
சூரியனின் காய்ச்சலைத் தடுக்கவும்
யத்தனிக்கும்.
வண்ணங்களில் வாணவேடிக்கைகளை
மனம்போனபடிச் சிதறும் வானம்.
கண்ணுள்ளோர்க்கு காட்சியாய்ப் பரவசம்.
அண்ணாந்து பார்க்காத அசடருக்கோ,
வானமென்ன? வண்ணமென்ன?!
தீபாவளி தானென்ன??

Super