
தத்துவம் – பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்
தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானால,் அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றிமறையும் தோற்றங்க ளெல்லாம் தியானமாக மாட்டா. புதர்க் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனதிலுள்ள மற்றக் கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக்கொண்டிருப் போமானால், உலகத்துக் காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன.
சுவாமிகள் ஆத்ம நாசத்திற்கு இடமான ஒருவகை இன்பத்தையே தியானமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்திலுள்ள மெய்யான இன்பத்தை யெல்லாம் நுகர்ந்து, தமக்கும் பிறர்க்கும் நிலைத்த பயன்கள் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உள்ளத்திலுள்ள குழப்பங்களும் துன்பங்களும் நீங்கி, சந்தோஷமும் புகழும் பெற வேண்டுமென்ற இச்சை உடையவர்கள், தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்வது அசாத்தியமன்று. அது இவ்வுலகத்திலேயே இந்த ஜன்மத்திலேயே சாத்தியமாகும்.
அஃதெப்படி என்றால், தமது உள்ளத்திலே தீரத் தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி அருள், பக்தி, சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்ப வேண்டும்.
”இவற்றை யெல்லால் நான் எனது உடைமையாக்கிக் கொள்வேன். இவற்றுக்கு எதிர்மறையான சிந்தனைகள் எனது அறிவினுள்ளே நுழைய இடங்கொடுக்க மாட்டேன்” என்று ஒவ்வொருவனும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

One Comment on “சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்”
Comments are closed.