உதவியும் மதிப்பிழக்கும்….!

உஷாதீபன்

“உங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்ல”… – கோபமாய்ச் சொன்னாள்

ராகினி.

“ஏன் அப்டிச் சொல்றே? “- நிதானமாய் சந்தானம் கேட்டார்.

“நம்ப வீட்டு மாடில பறந்து விழுந்திருக்கிற பக்கத்து வீட்டுத் துணிகள

நீங்க ஏன் தூக்கித் அங்க போடுறீங்க….? வேணும்னா வந்து, கேட்டு

எடுத்திட்டுப் போகட்டுமே…! அவுங்க வீ்ட்டுத் துணிமணிகளத் தொடக்

கூச்சமாயில்லயா உங்களுக்கு? ஒரு விவஸ்தை வேண்டாம்?”

“இதுல என்ன இருக்கு…ஒரு உதவிதானே…! மொத்தமாத்தானே அள்ளிப்

போட்டேன்…”

“செய்ங்க…வருஷம் பூரா செய்திட்டிருங்க…இப்டித்தான் எதிர்த்த வீட்டுத்

தபால வாங்காதீங்கன்னேன். அவர் ஊருக்குப் போயிருந்தா என்ன,

திண்ணைல வீசிட்டுப் போறான்….நீங்க வாங்கப் போக, நம்ம தபாலோட

சேர்த்து அவரோடதையும் கட் பண்ணி உடைச்சிட்டீங்க…அவர் பார்த்தா என்னநினைப்பாரு? சந்தேகப்பட மாட்டாரு….தேவையா நமக்கு?”

“ராஜாராம்தான் வாங்கி வைக்கச் சொன்னாரு…நானாவா செய்றேன்.

கைதவறுதலா சிசர்ல கட் பண்ணும் போது அவரோடதும் கட் ஆயிடுச்சு…”

“அதோ அவர் ஊர்லர்ந்து வந்துட்டார் போல்ருக்கு… சத்தம் கேட்குது…சொல்லிக் கொடுத்திட்டு வாங்க…”

தயங்கியவாறே நுழைந்தார் சந்தானம். “வந்தாச்சா…? இந்தாங்க

உங்களுக்கு வந்த லெட்டர்ஸ்…”

“ரொம்ப தாங்க்ஸ் சார்…இருங்க காபி சாப்டிட்டுப் போகலாம்….”

“இருக்கட்டும்…சாவகாசமா வர்றேன். அதுல ஒரு தபால்…ஏதோ மியூச்சுவல் ஃபண்ட் ஸ்டேட்மென்ட்னு நினைக்கிறேன். தவறுதலா என்

தபாலோட சேர்ந்து கட் ஆயிடுச்சு…கொஞ்சம் பார்த்துக்குங்க….”

சொல்லிவிட்டுப் படியிறங்கினார் சந்தானம்.

“போனவாட்டி கூட இப்டி ஒண்ணு ஓப்பனாயிருந்திச்சுன்னு

நினைக்கிறேன்….”

முனகியமாதிரி ராஜாராமின் வார்த்தைகள் காதில் விழ, மனசுக்குள் சுரீர் என்றது இவருக்கு.