ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

  1. பாடத் தெரியுமா?

மாலை நான்கு மணிக்கு ஸரஸ்வதி, ஸ்வர்ணம், ரகுபதி மூவரும். ராஜமையர் ரயிலடிக்கு அனுப்பி இருந்த மாட்டு வண்டியில் சாவித்திரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
“வாருங்கள் அம்மா! வா ..ம்மா!” என்று மங்களம் வாய் நிறைய உபசாரத்துடன் கூப்பிட்டு, எல்லோரையும் உள்ளே அழைத்துப் போனாள். ”இவன்தான் என் மூத்த பையன் சந்திர சேகரன்” என்று ராஜமையர் தம் பிள்ளையை வரப்போகும் மாப்பிள்ளைக்கு அறிமுகம் செய்து வைத்தார். “இப்படி உட்காருங்கள் மாமி” என்று கூறி, சீதா, ரத்தினக் கம்பளம் ஒன்றை எடுத்து விரித்து உபசரித்தாள். ஸரஸ்வதியும் ஸ்வர்ணமும் அமர்ந்து, லோகாபிராமமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சம்பிரதாயப்படி சிற்றுண்டியும் காபியும் சாப்பிட்டு முடிந்த பின்பு ஸரஸ்வதி தன்னுடன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் முதலியவைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்தாள்.
”பெண்ணை வரச்சொல்லுங்கள் மாமி” என்றாள் ஸரஸ்வதி. வீணையைப் பழிக்கும் அவள் குரல் இனிமையைக் கேட்டுச் சந்துரு. அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்தான். சாந்தமும் அழகும் கொண்ட அந்த முகவிலாசத்தை அவன் – இதுவரை பார்த்த – எந்தப் பெண்ணிடத்திலும் கண்டதில்லை என்று நினைத்தான். ஆனால், கருணை வடியும் இந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் ஒன்று லேசாக அவன் மனத்தில் தோன்றியது. எங்கே பார்த்திருக்க முடியும்? போன வருஷம் வடக்கே போய் வந்தானே அங்கே யாரையாவது கண்டிருப்பானா? சிறிது நேரம் யோசனையில் மூழ்கி இருந்தான் சந்துரு. திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாகக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்தைப் பார்த்தான் சந்துரு. அந்த முகத்தில் நிலவும் கம்பீரமும் சாந்தமும் இந்தப் பெண்ணிடம் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. அது போதாதா அவளை எழிலுள்ள வளாகக் காட்டுவதற்கு! சகல கலாவாணியாகிய ஸரஸ்வதி தேவியின் கடாட்சத்துக்குப் பாத்திரமானவள்தானே இந்தப் பெண்ணும்! வெகு அற்புதமாக வீணை வாசிக்கிறாள். அகத்தின் அழகு முகத்தில் சுடர்விடாதா! அறிவுக் களை என்பது அலாதியானது அல்லவா!
சந்துருவின் கண்களை ஸரஸ்வதியின் நீண்ட நயனங்கள் சந்தித்துப் பூமியை நோக்கித் தாழ்ந்தன. அவன் தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் பார்ப்பதை அறிந்த ஸரஸ்வதி. ”அத்தான்! பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்; பிறகு ஏதாவது குறை சொல்லாதே!” என்று கூறி, முறுவலித்தாள்.
சந்துரு சுய நினைவு வந்தவனாகத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி, பெரியவர்கள் எல்லோருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு உட்கார்ந்தாள்.
“உம்….. பெண்ணை நல்லதாக ஒரு பாட்டுப் பாடச் சொல்லுங்களேன், மாமி” என்றாள் ஸரஸ்வதி.
“எங்கள் வீட்டில் யாருக்குமே நன்றாகப் பாடத் தெரியாதே” என்று கூறினாள் சீதா, ஸரஸ்வதியைப் பார்த்து.
தெரியாது! சமைக்கத் தெரியாது. குடும்பம் நடத்தத் தெரியாது. பாடத் தெரியாது. பேசத் தெரியாது! இந்தத் ’தெரியாது’ என்கிற சொல் எவ்வளவு பேரைக் காப்பாற்றுகிறது. தெரியுமா? ‘பாவம்! அவனுக்கு ஒன்றுமே தெரியாது!’ என்று பிறரை அநுதாபப்படச் செய்கிறதும் இந்தத் ’தெரியாது’ என்கிற சொல்தான்.
“இந்த வீட்டில் யாரோ பாட்டுக் கற்றுக்கொள்ளுகிறார்கள். அதற்கு அத்தாட்சியாக அதோ தம்பூர் வைத்திருக்கிறது. ஏன் ஸார்! ஒரு வேளை படித்துப் படித்து என்னத்தைப் புரட்டப் போகிறோம் என்று. நீங்கள் பாட்டுக் கற்றுக்கொள்கிறீர்களோ?” என்று கேலிப் புன்னகையுடன் ரகுபதி சந்துருவைப் பார்த்துக் கேட்டுவிட்டுச் சாவித்திரியைக் குறும்பாகப் பார்த்தான்.
சாவித்திரி, கோபத்தால் முகம் சிவக்கச் சீதாவைப் பார்த் தாள். ‘நாளெல்லாம் வள வளவென்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பாயே. இப்போது என்ன ஒரே பேசா மடந்தை ஆகி விட்டாய் நீ?’ என்று கேட்பதுபோல் சாவித்திரி கோபக் கண் களால் தன் தங்கையைப் பார்த்தாள்.
சீதா, அர்த்த புஷ்டியுடன் ஒரு சிரிப்புச் சிரித்தாள். அப்புறம் ரகுபதியின் பக்கம் திரும்பி, “வீணாகச் சாவித்திரியின் பேரில் சந்தேகப்படாதீர்கள்.. நான் தான் இந்த வீட்டில் பாட்டுக் கற்றுக்கொள்கிறவள். எனக்காகத் தான் தம்பூர் வாங்கியிருக்கிறார்கள். சாவித்திரி அதைத் தன் விரலாலும் தொட்ட தில்லை!” என்று கூறிவிட்டுக் ‘களுக்’ கென்று சிரித்தாள்.
“அப்படியானால் யாராவது பாட்டுத் தெரிந்தவர்கள் தான் இரண்டு பாட்டுகள் பாடக்கூடாதா? என்ன ஸரஸு! இந்தப் பூனை யும் பாலைக் குடிக்குமா என்று உட்கார்ந்திருக்கிறாயே? நீதான் பாடேன். கல்யாணப் பெண்தான் பாடவேண்டும் என்று எந்தச் சாஸ்திரத்திலாவது சொல்லியிருக்கிறதா?” என்று ரகுபதி உரிமையுடன் ஸரஸ்வதியிடம் கூறினான்.
“பாடித்தான் ஆகவேண்டும் என்றால், கட்டாயம் பாடிவிடுகிறேன், அத்தான்” என்று சரஸ்வதி கூறிவிட்டு, சீதாவின் பக்கம் திரும்பி, “சீதா! நீ போய்த் தம்பூரை எடுத்து வா அம்மா” என்றாள்.
ஸரஸ்வதி பாடப்போகிறாள் என்பதைக் கேட்டவுடன் சந்துருவின் மனம் சந்தோஷத்தில் ஆழ்ந்தது. தம்பூரை மீட்டிக் கொண்டு மெல்லிய குரலில் அவள் பாட ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர். ‘ஆஹா! இவ்வளவு அழகும் சங்கீத ஞானமும் உடைய பெண்ணைவிட்டு, அசலில் இவர்கள் பெண் தேடுவானேன்?’ என்று சந்துரு நினைத்து வியந்தான். மங்களமும் இதையே நினைத்து ஆச்சரியப் பட்டாள். கூடத்தில் மாட்டியிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்திலிருந்தே, மானிட உருக்கொண்டு இந்தப் பெண் வந்து உட்கார்ந்து பாடுகிறதோ என்று ஐயம் ஏற்படும் நிலையைச் சிருஷ்டித்து விட்டாள் ஸரஸ்வதி. அவள் உள்ளம் உருக, ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்கிற பாடலைப் பாடியபோது, எல்லோர் உள்ளமும் அந்தப் பக்திப் பிரவாகத்தில் லயித்து, அதிலேயே அழுந்தி விட்டன என்று கூறலாம். ஸரஸ்வதி, கச்சிதமாக நான்கு கீர்த்தனங்கள் பாடித் தம்பூரை உரைக்குள் இட்டு, மூடி வைத்துவிட்டு, உட்கார்ந்தது தான் எல்லோரும் சுய நினைவை அடைந்தார்கள்.
”நன்றாகப் பாடுகிறாளே! இந்தக் குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று மங்களம் ஸ்வர்ணத்தைப் பார்த்துக் கேட்டாள். ஸ்வர்ணம் சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். பிறகு, கண்ணீர் திரையிட, “இல்லை. அவளுக்குத்தான் பகவான் ஒரு தீராத குறையைக் கொடுத்துவிட்டானே!” என்றாள் ஸ்வர்ணாம்பாள்.
ஸரஸ்வதிக்கு ஏதோ குறை என்று கூறியதும், அங்கிருந்தவர்களுக்கு அது என்ன வென்று அறிய ஆவல் ஏற்பட்டது. அவர்கள் அதை எப்படிக் கேட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் கேளாமலேயே ஸ்வர்ணாம்பாள் ஸரஸ்வதியின் கால் ஊனத்தைப்பற்றி மங்களத்திடம் கூறினாள். மேலும் அவள். “அவள்” அத்தானுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அபிப்பிராயம் இருந்தது. தாயில்லாததால், குழந்தையிலிருந்தே நானும் அவளை வளர்த்து விட்டேன். அவளுக்குத்தான் கல்யாணம் செய்து கொள்ளவே இஷ்டமில்லையாம். ‘முதலில் எல்லோரும் சம்மதப்பட்டுச் செய்து கொண்டு விடுவீர்கள் அத்தை. காலப்போக்கில் உங்கள் மனமெல்லாம் எப்படி எப்படியோ மாறிவிடும்’ என்று கூறுகிறாள்.
“அத்தானுக்குப் பாட்டுப் பிடிக்கிறது என்று என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்று வைத்துக்கொள் அத்தை. கொஞ்ச நாளைக்குள் அதுவும் அலுத்துவிடும். ‘போயும் வந்தும் இந்த நொண்டியைத் தானா என் தலையில் கட்டிக்கொண்டு அழவேண்டும்!’ என்று அவன் மனம் சலித்துப்போகும். வேண்டாம், அத்தை’ என்று வேதாந்தம் பேசுகிறாள் ஸரஸ்வதி” என்று ஸ்வர்ணாம்பாள் மங்களத்திடம் கூறினாள்.
ஸரஸ்வதி லஜ்ஜையுடன் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, “என்ன அத்தை இது? போகிற இடத்திலெல்லாம் என் ராமாயணம் பெரிசாக இருக்கிறதே” என்று கேட்டாள்,
“ராமாயணம் என்ன? வயசு வந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் வைத்திருந்தால், காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள நினைப்பது எல்லோருக்கும் சசஜந்தானே?” என்றாள் ஸ்வர்ணாம்பாள்.
பெண் வீட்டாருக்குப் பிள்ளையைப் பிடித்துவிட்டது. பிள்ளை வீட்டாரின் அபிப்பிராயமும் ஒன்றாகத் தான் இருந்தது. சாவித்திரியின் சம்மதத்தை, ஸரஸ்வதி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கூடத்தில் இருந்தவர்கள் ஏதோ வேலையாக வெளியே சென்றதும் ஸரஸ்வதி, சாவித்திரியின் அருகில் சென்று உட்கார்ந்தாள். பிறகு சங்கோசத்துடன், ”என் அத்தானை உனக்குப் பிடித்திருக்கிறதா? சொல்லிவிடு. நான் ரகசியமாக இந்த விஷயத்தை அவனிடம் சொல்லி விடுகிறேன்” என்று கேட்டாள். சாவித்திரி மெதுவாகத் தலையை அசைத்து விட்டு மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.
”பெண்ணின் மன ஆழத்தை இன்னொரு பெண்ணே புரிந்து கொள்வது கஷ்டம்” என்பதை ஸரஸ்வதி உணர்ந்திருக்க மாட்டாள். சிலர் வெகுளியாக இருக்கிறார்கள். மனத்தில் ஒன்றையும் ஒளித்து வைக்கமாட்டார்கள். படபடவென்று பேசிவிடுவார்கள். சிலரின் மன ஆழத்தில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன -என்பதையே எவ்வளவு முயன்முலும் புரிந்து கொள்ள முடியாது. ஸரஸ்வதி வெள்ளை மனம் படைத்தவள்; கபடம் இல்லாதவள்; சூதுவாதுகளுக்கு மனத்தில் அவள் இடமே அளிக்கவில்லை.
சாவித்திரி, வார்த்தைகளையே அளந்து பேசும் சுபாவம் படைத்தவள். உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் காட்டி, ஒரு நொடிப் பொழுதில் எல்லோரையும் மட்டந் தட்டிவிடுவாள் அவள். பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருக்கும் சாவித்திரியை ஸரஸ்வதி கேலியாகப் பார்த்து, ”இப்பொழுது என்னிடம் ஒன்றும் சொல்ல மாட்டாய். அப்படித் தானே? அத்தானிடமே நேரில் சொல்லப் போகிறாயாக்கும்! ஹும்…………” என்று பெருமூச்சு விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றாள்.
இவ்வளவு நேரமும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டிக்கு இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது. ” இதென்னடீது அதிசயம்! பெண் பார்க்க வந்தால் அவளைப் பாடச் சொல்றதைத் தான் கண்டதுண்டு; கேட்டதுண்டு. இங்கே தலைகீழ்ப் பாடமா பயிருக்கே! யாரோ ஒருத்தி வருகிறாள்; இல்லாத உறவெல்லாம் கொண்டாடி; புருஷா இருக்கிறதையும் பார்க்காமே பாட்டுக் கச்சேரி செய்கிறாள். இதுகளும் பேஷ் பேஷ்னு தலையாட்டுகிறதுகள்! ஹும் . . . . நன்றாகவே யில்லை” என்று சரளி வரிசை பாட ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவளை யாரும் சட்டை செய்வதாக இல்லை. குறை சொல்வது தான் அவள் கூடப் பிறந்த குணமாயிற்றே என்று உதறிவிட்டு, மேற்கொண்டு ஆகவேண்டியதைக் -கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும் – விருட்சம் நாளிதழ்