
- பொறாமை
ரகுபதியின் குடும்பத்தார் வசித்து வந்த ஊர், கிராமாந்தர வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல. நூறு பிராம்மணக் குடும்பங்களும் மற்ற வகுப்புக் குடும்பங்கள் ஐநூறு வாழ்ந்த அந்தச் சிற்றூரில் ஒரு பெரிய பள்ளிக் கூடமும், தபாலாபீஸும், அழகிய கோவிலும் இருந்தன. அவ்வூரில் வசித்துவந்த பிராம்மணக் குடும்பங்களில் பெரும்பாலோர் நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள். ரகுபதியின் தகப்பனார் அவன் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். ஊர் ஜனங்கள் நல்லவர்களாக இருந்ததால் பால்ய விதவையான ஸ்வர்ணாம்பாள் ஒருவித வம்புக்கும் ஆளாகாமல் அந்த ஊரிலேயே காலம் தள்ளி வந்தாள். ரகுபதி தாய்க்கு அடங்கிய பிள்ளை. ஆனால், தாயார் தான் பிள்ளைக்கு அடங்கி நடந்துவருவதாகச் சொல்லும்படி இருந்தது. பெரிய படிப்பெல்லாம் படித்துத் தேறிவிட்டு ரகுபதி வேலைக்குப் போகாமல் வீட்டுடன் இருந்தான்.
சிறு வயதில் ஸ்வர்ணாம்பாள் – நன்றாகப் பாடுவாள். அவள் குரலினிமைக்கு ஆசைப்பட்டே ரகுபதியின் தகப்பனார் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண் டாராம். அவரும் சங்கீதப் பித்துப்பிடித்த மனுஷன். இந்தக் காலத்தைப்போல் சங்கீத சபைகளும், நாடக மண்டலிகளும் அப்பொழுது அவ்வளவாக இல்லை. நல்ல சங்கீதத்தைக் கேட்க வேண்டுமானால் கோயில்களின் உற்சவகாலங்களிலும், பெரிய மனிதர்கள் வீட்டுக் கல்யாணங்களிலுமே முடியும். பெரிய வித்வான்களை அழைத்துக் கோயிலில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்வதோடு. அவர்களைத் தம் வீட்டிலேயே அழைத்து வேண்டிய சௌகர்யங்களைச் செய்து கொடுப்பார் ரகுபதியின் தகப்பனார். அவருக்கு வாய்த்திருந்த மனைவியும் அவர் எடுத்த காரியத்தில் பங்கெடுத்துக்கொண்டு சண்டை, பூசலுக்கு இடம் இல்லாமல் நடந்து கொண்டாள். பரம்பரையாக இருந்துவந்த சங்கீத ஞானம் ரகுபதியையும் பிடித்துக்கொண்டது. அவனும் தகப்பனாரைப்போலவே சங்கித விழாக்கள் நடத்தினான். அதற்காக நன்கொடைகள் கொடுத்தான்.
குழந்தைப் பருவத்திலிருந்து தாயை இழந்து தன்னுடன் வளர்ந்து வந்த ஸரஸ்வதிக்கும் அவ்வித்தையைப் பழுதில்லாமல் கற்பித்தான். தனக்கு வாய்க்கும் மனைவியும் அம்மாதிரி இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுவது இயற்கையே அல்லவா?
அன்று கோழி கூவுவதற்கு முன்பே ரகுபதியின் வீட்டில் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டார்கள். வேலைக்காரி, வரப்போகும் தன் புது எஜமானிக்காக விதவிதமாகக் கோலங்கள் போட்டு, செம்மண் பூசிக்கொண்டிருந்தாள். சமையலறையில் ஸ்வர்ணாம்பாளும், ஸரஸ்வதியும் காலை ஆகாரம் தயாரிப்பதில் முனைந்திருந்தனர். எவ்வளவுதான் பணம் காசில் மூழ்கி இருந்தாலும், சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளும் வழக்கம் மட்டும் அவ்வூரில் இல்லை. யார் வீட்டில் எந்த விசேஷம் நிகழ்ந்தாலும் ஊரில் உள்ள அத்தனை பெண்களும் ஒன்று சேருவார்கள். தலைக்கொரு வேலையாகச் செய்வார்கள். வேலையும் அழகாகவும் ஒழுங்காகவும் முடிந்துவிடும். அன்றும் கோடி வீட்டிலிருந்து பாகீரதி அம்மாமி வந்திருந்தாள். வயது அறுபது இருக்கும். வாய் படபடவென்று எதையாவது பொரிந்து தள்ளுவதற்கு ஈடாக கையும் சரசரவென்று லட்சியமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும். இதற்கு நேர் விரோத குணம் படைத்தவள் ரகுபதியின் தாய் ஸ்வர்ணாம்பாள். கறிகாய் நறுக்க உட்கார்ந்தால் மணிக் கணக்காக அங்கேயே உட்கார்ந்திருப்பாள்!
பாகீரதி அம்மாமி மற்றக் காரியங்களைக் கவனித்துக்கொண்டிருக்க, ஸ்வர்ணம் ஒரு கூடை நிறையக் காய்கறிகளை வைத்துக் கொண்டு அரிவாள்மணைக்கு முன்பு உட்கார்ந்திருந்தாள். உள்ளே யிருந்து கமகமவென்று சமையல் வாசனை கிளம்பிக் கொண்டிருந்தது. பாகீரதி அம்மாமி பாயசத்துக்குச் சேமியாவை வறுத்துக்கொண்டே, “ஏண்டி ஸ்வர்ணம்! நீ முன்னாடி அந்த இடத்தை விட்டு எழுந்திரு பார்க்கலாம். மீதியை நான் நறுக்கிக் கொள்கிறேன்” என்றாள்.
“இருக்கட்டும் அம்மாமி, நீங்கள் எத்தனை காரியங்கள் தான் செய்வீர்கள்?”
”நான் என்னத்தைச் செய்ய இருக்கிறது? அடுப்பில் வைத்தால் தானே ஆகிறது. ஏண்டி! புடலங்காயைக் கூட்டுக்கு நறுக்கச் சொன்னால் விரல் பருமனுக்கு நறுக்கி வைத்திருக்கிறாயே!” என்று கூறினாள் பாகீரதி அம்மாமி.
“த்ஸொ …… த்ஸொ . . . . திரும்பவும் நறுக்கிவிடட்டுமா மாமி?” என்று கேட்டாள் ஸ்வர்ணம் பாகீரதியைப் பார்த்து.
”வேண்டாம்; வேண்டாம். நாட்டுப்பெண் வருகிற நாழிகை ஆகிறது. நீ போய் மற்றக் காரியங்களைக் கவனி” என்றாள் அந்த அம்மாள்.
அவள் சொல்லி வாய்மூடுமுன் வாசலில் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து மங்களமும், சந்துருவும், சாவித்திரியும் இறங்கினார்கள். ஸரஸ்வதி பரக்கப் பரக்க ஆரத்தி எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் முகத்தில் பொங்கிய சந்தோஷத்தைக் கண்டு சந்துரு வியப்படைந்தான்.
“வா, சாவித்திரி! வாருங்கள் மாமி” என்று புன்முறுவலுடன் வரவேற்றாள் ஸரஸ்வதி. அவர்களை அழைத்துவிட்டு அவள் திரும்பியபோது சந்துரு தன்னையே உற்றுப் பார்ப்பதை அறிந்ததும் அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. ரகுபதி அதுசமயம் வெளியே சென்றிருந்ததால் சங்கோஜத்துடன் ஸரஸ்வதி அவனைப் பார்த்து, “வாருங்கள்” என்று அழைத்தாள்.
பல வருஷங்களுக்கு அப்புறம் அவ்வீட்டிற்கு ஒளி தர வந்திருக்கும் சாவித்திரி, மாமியாரை நமஸ்கரித்தபோது ஸ்வர்ணாம்பாள் உணர்ச்சி மிகுதியால் வாயடைத்து நின்றாள். கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்கி வழிந்தது. உவகையுடன் உள்ளம் – பூரிக்க, பெருமிதத்துடன் சாவித்திரியைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
“வீட்டிலே எல்லோரும் சௌக்யந்தானே, மாமி?” என்று ஸரஸ்வதி மங்களத்தை விசாரித்தபோது, ‘சௌக்யந்தானே?” என்று தன்னை நேரில் கேட்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு ஸரஸ்வதி மறைமுகமாகத் தன் தாயை விசாரிப்பதாக நினைத்த சந்துரு, ”சீதா உன்னை ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னாள். உன்னிடம் கற்றுக்கொண்ட பாட்டுகளைப் பாடம் பண்ணிவிட்டதாகவும் சொன்னாள்” என்றான்.
“ஓஹோ!” என்று அவனுக்குப் பதில் அளித்துவிட்டு ஸரஸ்வதி மற்ற அலுவல்களைக் கவனிக்க உள்ளே சென்றாள்.
இதற்குள்ளாக வெளியே போயிருந்த ரகுபதி திரும்பி விடவே சாவித்திரியும், மங்களமும் கூடத்திலிருந்து பின் கட்டுக்குச் சென்றார்கள்:
“வந்தவர்களை வா என்று கூடச் சொல்லத் தெரியாமல் பிரமித்து உட்கார்ந்திருக்கிறாயே ஸ்வர்ணம். நாலு வார்த்தைகள் நறுக்கென்று பேசத் தெரிய-வில்லையே உனக்கு!” என்று பாகீரதி அம்மாமி கையில் பிடித்த கரண்டியுடன் சம்பந்தி அம்மாளை வரவேற்று. ஸ்வர்ணத்தைப் பரிகாசம் செய்தாள்.
ஸ்வர்ணம் நிஜமாகவே பிரமித்துப்போய் இருந்தாள். ஒன்றரை வயதுக் குழந்தையிலிருந்து தகப்பன் இல்லாமல் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைக்குக் கல்யாணம் ஆகி மனைவி வந்திருக்கிறாள் என்றால் அது எளிதான காரியமா? நாலு பேரைப்போல் அவளும் பேரன் பேத்தி எடுக்கப் போகிறாள். இருண்டிருந்த வீட்டில் ஒளி வீசப்போகிறது. இனிமேல் தன்னை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை என்றே அவளுக்குத் தோன்றியது.
சாவித்திரி புக்ககம் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த இரண்டு மாதங்களில் ஸ்வர்ணம் நாட்டுப்பெண்ணுக்கு விதவிதமாகப் பூவைத்துப் பின்னினாள். நகைகள் பூட்டி அழகு பார்த்தாள். ஒரு வேலையும் செய்யவிடாமல் தானே எல்லா வற்றையும் கவனித்துக்கொண்டாள். சாதாரணமாகத் திருப்தி யடையும் மனமிருந்தால், மாமியாரின் இந்தச் சரளமான சுபாவத்தைப் புரிந்துகொண்டு சாவித்திரி ராஜாத்தி மாதிரி இருந்திருக்கலாம். அந்த வீட்டுக்கு நாட்டுப்பெண்ணாகவும், பெண்ணாகவும் இருந்து அருமையோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால், லேசில் ஒருவரையும் நம்பும் சுபாவம் படைத்தவள் அல்ல சாவித்திரி. அவள் எதிரில் தங்கப் பதுமைபோல் வளையவரும் ஸரஸ்வதியைப் பார்த்தபோதெல்லாம் அவள் நெஞ்சு பொறாமை யால் வெடித்துவிடும் போல் இருந்தது.
”இவளுக்கு என்ன இந்த வீட்டில் இவ்வளவு சலுகை?’ என்று தன்னைக் கேட்டு அதற்கு விடை புரியாமல் தவித்தாள் சாவித்திரி, சதாகாலமும் முகத்தை ‘உப்’ பென்று வைத்துக்கொண்டு கணவன் கேட்கும் வார்த்தைகளுக்குப் பதில் கூறாமல் இருந்தாள் அவள்.
ஓர் இரவு கணவனும், மனைவியும் தனியாகச் சந்திக்கும் போது சாவித்திரியின் கண்கள் கோவைப் பழம்போல் அழுது சிவந்திருந்தன. திறந்த மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்த வண்ணம் தொலைவில் தெரியும் ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் சாவித்திரி.
அடிமேல் அடிவைத்து உள்ளம் சிலிர்க்க, தன்னை நாடிவரும் ரகுபதியை அவள் கவனிக்கவில்லை. மங்கிய நிலாவில் மனைவியின் முகத்தைத் திருப்பி அவன் பார்த்தபோது கண்களிலிருந்து கண் ணீர் முத்துக்கள் போல் கன்னங்களில் உருண்டன. ஏன் சாவித்திரி அழுகிறாள்? பல குடும்பங்களில் இன்றும் நடக்கும் மாமியார். நாட்டுப் பெண் சண்டை தன் குடும்பத்தில் தோன்றிவிட்டதா என்று ரகுபதி ஐயுற்றான். பிறகு அன்புடன், “சாவித்திரி! ஏன் அழுகிறாய்?” என்று கேட்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்.

One Comment on “ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்”
Comments are closed.