செந்தமிழ்பாரதி/தெரிந்தால் கூறுங்கள்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை

சின்ன மழைச் சாரலில்
சிட்டுக்குருவிகள் குளித்துச்
சிறகுகளை உலர்த்திவிட்டுக்
காற்றில் மிதக்கிறது.
பாலைவனம் பூப்பதற்குக்
கண்ணீர்விடும் மேகங்கள்
கடலை நிரப்பிவிட்டு
கரிசல் காட்டில் அழுகிறது.
ஓடைகளைஅறுத்து அருவியாக்கி
ஆறுகள் முளைத்தனவே
காடுகளைக் கடந்தது
கடலில் கலந்தனவே!
மாதவிடாய் இல்லாமல்
வயசுக்குவந்த பூக்கள்
ஒருநாள் ராணியாக வாழ்ந்து
சாவதைப் பாருங்கள்.
உலக வரைபடமே தெரியாமல்
பயணிக்கும் பறவைகள்
யாரை நம்பி சிறகைவிரிக்குது
தெரிந்தால் கூறுங்கள்.