
விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் வாசித்த 3வது கவிதை
அவசரமாய் வந்தவர்கள்
அவர்களென்று
அழைத்துக்கொண்டு போய்
அமரச் செய்தேன்
அப்பா உள்ளே
தலைகாட்டி எட்டி நின்றார்
அப்பாவை அப்பாவென்று
கத்தாமல் பார்த்தேன்
கண்ஜாடை புரியாமல்
அப்பா நகர்ந்ததைக் காட்டாமல்
வலிய அவர்களுடன் பேசி
கண்சிமிட்டினேன்
தம்பி இன்னும் வரவில்லை
குழந்தைகள் தூரத்தில் நின்று
அவர்களிடம் அகப்படாமல்
குறும்புச் சிரிப்புச் சிரித்தன
மனைவி ஓடிவந்து
காபி கோப்பைகளை வைத்து
எதையோ தேடும் ‘பாவனையில்’நகர்ந்தாள்
அவசரமில்லாமல் காப்பி
குடித்துக்கொண்டு சிரித்தார்கள்
எங்கும் நகராமல்
நானும் அவர்களுடன் இருந்து
அவர்களுடன் பேசி
அவர்களுடன் வெளியே
நடக்க ஆரம்பித்து
அவர்களில் ஒருவனாகத் தெருவில்
தெரிந்தபோது
அப்பா கூப்பிட்டார்
என்பேர் சொல்லி
திரும்பிப் பார்த்தால்
குழந்தைகளுடன் மனைவி
எல்லோரும் விசித்திரமாய்
என்னைப் பார்த்தபடி

One Comment on “அழகியசிங்கர்/ விருந்தாளிகள்”
Comments are closed.