
17-10-25-இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 7
இந்த இரவில் சாத்தானின் நினைப்பு
அதிகமாக வருகிறது
ஏனென்று கேட்கிறீர்களா?
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
காலையில் செய்தித்தாள் காட்டியது
கல்லூரி விடுதியில் மாணவி மரணம்
காரணம் இன்னும் தெரியவில்லை
சற்று நேரத்தில் பரிதாபம்
கண்ணெதிரே நாய்க்குட்டியை
வாகனச் சக்கரம் கொலை செய்ய
வார்த்தையின்றிப் போகிறார்கள்
மதியமோ மழை கொட்டியது
தெருவில் பலவாறாய்த் தீவுகள் தோன்றின
ஆழமான மடுக்களில் அலறிய வண்டிகள் பல
மாலையில் மாணவர்கள் பள்ளிவிட்டு வரும்போது
அதிகச் சுமையால் கவிழ்ந்த பள்ளி வேன்
இவை எல்லாம் நான் கவிதை எழுதக்
கூடாதென சாத்தான் செய்த சதிதானே
