
“யாரு தம்பி? நீங்க என்ன வேணும்?”
“சார், என் பேர் ராம். உங்க பொண்ணு வேலை பார்த்த ஆஃபீஸ் இருந்த கட்டடத்தில் தான் என்னோட ஆபீஸ் இருந்தது. அவங்க போகிற பேருந்தில்தான் நானும் தினமும் போவேன்”.
” அதனால ?” பெரியவரின் நெற்றி சுருங்கியது.
“எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் சார்”.
“தம்பி, காதல், கீதல் என்று சொல்லிட்டு வராதீங்க. மூணு வருஷம் முன்னாடி பஸ் ஸ்டாப்பில் அந்த குடிகார லாரி கடங்காரன் என் பொண்ணு மேல மோதினதில் விபத்துக்குள்ளாகி இப்ப உடல்நிலை தேறினாலும் தான் யாருங்கிறதையே மறந்துட்டு இருக்கிறா”.
“தெரியும் சார். எனக்கு தான் அவங்களை தெரியும். அவங்களுக்கு நான் யாருன்னு கூட தெரியாது. இதை மட்டும் அவங்க கிட்ட கொடுத்துடுங்க சார்”.
கையில் அழகான பட்டுத் துணியில் சுற்றி வைத்து இருந்ததை அவரிடம் கொடுத்தான்.
பிரித்துப் பார்த்தார். அதிர்ந்து போனார். விபத்து நடந்த அன்று அவர் மகள் அணிந்திருந்த அதே உடையில் அழகு ஓவியமாக நின்றாள்.
“தினமும் அவங்க பஸ் ஸ்டாப்பில் நிற்கிறதை பார்த்து மனசுக்குள்ள வச்சுட்டு அன்னைக்கு ராத்திரி படமா வரைஞ்சு வைப்பேன். விபத்து நடக்கிற சில நிமிஷங்களுக்கு முன்னாடி தவிப்போட பேருந்து எதிர்பார்த்து தேவதை மாதிரி நின்னுட்டு இருந்தாங்க . அப்போ என் நண்பன் வரவும் அவனுடன் நான் பைக்ல போயிட்டேன். அன்னைக்கு ராத்திரி வரைஞ்சு வச்சு மறு நாளைக்கு அவங்க கிட்ட கொடுக்கணும்னு இருந்தேன். முடியலை. இப்போதான் துணிவு வந்தது. உங்களுக்கு விருப்பம் இருந்தா இதை அவங்க அறையிலே வச்சிடுங்க . என்னை மன்னிச்சிடுங்க சார்”.
சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் கதவை மூடிக் கொண்டு வெளியேறினான். துக்கம் அலை அடிக்க அழுகையை விழுங்க முயற்சித்தவாறு சற்று நின்றான்.
சிறிது நேரம் சென்று அவன் கடைசிப் படி இறங்கும்போது உள்ளிருந்து “இது..இது.. ராம் !” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
***

மனதைத் தொட்ட கதை
நன்றி அக்கா
விருட்சம் போட்டின்னா நீங்க புகுந்து விளையாடிடுவீங்க போல இருக்கு. இதுவும் மிகவும் தரமான கற்பனை. Very well conceived and wonderfully presented. நடை அருமை. மொத்தத்தில் ஒரு அறுசுவை விருந்து.
மிக்க நன்றி sir
சிறப்புப்பா