லக்ஷ்மி மணிவண்ணன் /ஆடும் முகங்களின் நகரம்

மூன்றாவது முறையாக
அந்த நகரத்துக்குப் போயிருந்தேன்
சவால்போல
கடும் வெயிலுக்கான குடையோடு
அலைந்து திரிந்ததில்
மர்மங்கள் லேசாய் துவங்கின.
நகரத்துக்கு ஊடாக
இரண்டோ மூன்றோ
புகைவண்டி வழிப்பாதைகள்
பிரிந்து செல்கின்றன.
குறுக்கு நெடுக்கமாய் திரியும்
பேருந்துகள்
எங்கு செல்கின்றன
பழக்கங்களை எப்படி இவை
ஜனங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றன
என்பதும் புரிந்தது.

புகைவண்டி நிலையங்களில்
ஜனங்கள்
தட்டையான மரக்கிளையாய்
நிலையத்துக்கு வெளியேயும்
நேர் தலைகீழான ஒரு மரக்கிளையாய்
நிலையத்துக்கு உள்ளேயும் செல்கிறார்கள்
பின்னலான மரக்கிளைகளால்
படர்ந்த வாயில்கள்

கழிப்பிட அறைகளுக்கு வெளியே
வரிசைகள்.
பலவிதமான உடைகளுக்குள் உள்ள
மனிதர்களும் வழி கேட்டால்
ஓரளவு சரியாய் சொல்லித் தருகிறார்கள்.
தொலைந்துபோய் விடுவதற்கான
சாத்தியங்களும் அதிகமில்லைதான்.

மின்சாரப் புகைவண்டிகளில்
பிரயாணிக்கிறவர்களின்
முகங்களைத் தவிர
கற்பனை செய்து கொண்ட அளவு
பயப்படும்படியாகவும்
ஏதுமில்லைதான்.
நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும்
கோணலாய் நின்று இருந்து கொண்டும்
சாய்ந்து கிடந்தும்
கைப்பிடியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும்
ஆடும் முகங்கள்.

ஒருநாள் மாலை
ஆறுமணி வாக்கில்
மீட்டர்கேஜ் புகைவண்டியில்
போய்க் கொண்டிருந்தேன்
ஓரிடத்தில் விளையாடப்படாத
மைதானம் தனியே கிடந்தது.

மஞ்சள்வெயில் படிந்த வீடுகளின்
பின்புறங்கள் முன்னால்
ஓடிக்கொண்டிருந்தன.
வீடுகளின் முன்பக்கம் தெரியும்
இடங்களில்
நிலையங்கள் வந்தன.

புகைவண்டிக்குள்
சில்லறை வியாபாரிகளின்
சத்தம்
பல காதுகளில் விழாமல்
தனி உறுப்பாய் கிடந்தது
மஞ்சள் வெயில் படிந்த
ஜனங்கள் ஒவ்வொருவராக
வெளியே
தெரிந்து
மறைந்து தெரிந்தார்கள்.

புகைவண்டி நிலையங்களின்
வலப்புறமும் இடப்புறமும்
சிலயிடங்களில் வலப்புறம்
சிலயிடங்களில் இடப்புறம்
என்று லெவல் கிராஸிங்கிலிருந்து
ஒரே மாதிரியாக
திறந்து வெளியேறுகிறது
நகரம்.

கடைசி நாள்
ஊர் திரும்பும்போது
நகரத்தை விட்டு வெளியேறும்
சாலைகள் சுத்தமாய் கிடந்தன.
கவர்ச்சியான வளைவுகளோடு
இரண்டு வளைவுகளின் மத்திகளில்
தாவரக்கூட்டம்
ஆளரவமற்ற போதையில்
மஞ்சள்வெயில்
இடைவெளிகள் கொண்ட
கட்டிடங்கள்.
நகரத்தில் தனிமை
வழிந்து கிடக்கிறது
நகரத்தை விட்டு வெளியேறும்
சாலையோரங்களில்.


(1990)

2 Comments on “லக்ஷ்மி மணிவண்ணன் /ஆடும் முகங்களின் நகரம்”

Comments are closed.