வளவ. துரையன்/ சில கவலைகள்

                   

13-2-26 இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை
                      நேற்று காலை முதல் 
                      விற்றுவிட்டு வந்த 
                      வீட்டின் நினைவுகள் 
                      வாட்டி எடுக்கின்றன.

                      போன வாரம்தான் 
                      கறிவேப்பிலைச் செடி 
                      சிறு குழந்தையானது 
                      சிரிப்பது போலத் 
                      துளிர் விடத் தொடங்கியது.

                      வாழையும் கண்ணாடி 
                      இலை விட்டுச் 
                      சீக்கிரம் பிரசவிப்பதாகச் 
                      சிறு முறுவல் காட்டியது.

                      தோட்டத்துக் கொடிகள் 
                      தங்களிடம் தொங்கும் 
                      ஈரத்துணிகளுக்காகப் 
                      பாவம் ஏங்குகின்றன.

                      சாக்கடைப் புழுவைத் 
                      இரைக்காகத் தேடி வரும் 
                      மீன்கொத்தி என்ன செய்யும்?

                      சுவர்மீது மதியச் சோறு 
                      இல்லாமல் காக்கையும் 
                      சுற்றிச் சுற்றி வரும்

                      மண்சட்டி நீரில் 
                      மாலையில் குளிக்க வரும் 
                      சிட்டுக்குருவிகள் 
                      மாற்றிடம் தேடிப்
                      போக வேண்டும்.

                      மாற்றத்தை ஏற்கத்தான் 
                      வேண்டுமென அணில்கள் 
                      அடுத்த மரம் தாவி ஆடுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன