யாமினி 18 வயது பட்டாம்பூச்சியாக ஓவியக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் புதிதாகச் சேர்ந்து இருந்தாள். அவளுக்குச் சின்ன வயதிலிருந்தே எதைப் பார்த்தாலும் தத்ரூபமாக அப்படியே வரையும் பழக்கம் இருந்தது. அவளின் பல ஓவியங்கள் பென்சில் கொண்டு வரையப் பட்ட கோட்டோவியங்கள் தான்.
அந்த கல்லூரியில் அவளின் ஆதர்ச ஆசிரியை நீலா வரைந்த படம் உலகின் மிகச் சிறந்த ஓவியம் என்று பரிசும் பாராட்டும் பெற்று இருந்தது. அவங்க "அந்த படம் பார்த்தவுடன் உங்க மனசில் என்ன தோணுதுன்னு சொல்லுங்க. என் மனசில் நினைச்ச பதிலைச் சொல்பவருக்கு ஒரு பரிசு உண்டு" என்று எல்லா மாணவர்களிடமும் கேட்டார்கள். அதைத் தான் இப்போ உற்று நோக்கியவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள் யாமினி. ஒவ்வொருவரும் அதைப் பார்த்து "நாட்டியமாடும் பெண், தன்னைத் தானே உற்று நோக்கும் பெண் , மாடர்ன் பெண், "என விதவிதமான பதில் சொல்ல, இவள் மெதுவாகச் சொன்னாள் " மேடம் , ஏதோ ஒரு பெரிய குழப்பத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் மனசுக்குள் தவிக்கும் பெண்" என்றதும் நீலா மேடம் முகம் மலர அவளைக் கட்டிப் பிடித்து "மிகச் சரி யாமினி. நீ தான் என் சிறந்த மாணவி. இன்றிரவு என்னோடு டின்னர் உனக்கு " என்றார்கள். யாமினி அப்படியே விண்ணில் பறந்தாள் மகிழ்ச்சியில்.
https://daily.navinavirutcham.in/?p=32665