
பேசக்கூட காசு கேட்பாய்போல
என்போர்கள்கூட
தன்னிச்சையாயென்னுடன்
பேசிய நாட்கள் குறைவு.
வெத்தலை பாக்கு வைத்து
அழைத்தால்தான்
எங்கள் வீட்டுக்குன் விஜயமோ
எனக் கேள்வி எய்வோர்
ஒருமுறைகூட என் வீடு வந்து
குசலோபரி கேட்டதில்லை..!
பெரிய ஆளாய்ட்டப்பா…
நாங்கள்ளாம் ஞாபகம் வருதா
என்போர்களின் ஏளனத்தூடே
என்னை உதிர்த்துவிட்ட
அவர்களின்
சந்திப்பு விருந்துகள்
படங்கள் சேதிகளாய்
ஊடகப் பதிவாகையில்
நானெங்கிருக்கிறேன்
என்பது தேடாமலேயே
தெளிவாகும் பலசமயம்..!
ஒரு தடவை
மணியடித்து
உயிர்ப்பித்து மரித்த அழைப்பை
ஓராயிரம் மிஸ்டு கால்களுக்கீடாய்
கணக்கிட்டு வாதிக்கையில்
என் கைபேசியழைப்புப்
பதிவு வரலாற்றில்
ஒருமுறை கூடச் சிலரின்
எண்பதிவிலாது தடமழியும்.!
அங்கா இங்கா
எங்கு வைத்திருக்கிறீர்கள்
உங்கள் வாழ்க்கையில்
என்னை என்கிற
சம்சயங்கள் சமயங்களில்
மனதில் தோன்றினாலும்
எங்கோ வைத்திருக்கிறீர்கள்
என்னையெனும்
நம்பிக்கை கிரீடமணிந்துதான்
இன்றளவும்
நான் நகர்வலம் போகிறேன்–
தினம் தினமும்…!

Arumai !👏🙏