
லதா தன் படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அவளது கைகளில் இரு முகமூடிகள் ஒன்றில் வெகுளி, சோம்பேறி என்றும் இன்னொன்றில் மகளிர் திலகம், விருது எனவும் எழுதி இருந்தது. அக்கா தங்கை தம்பி அண்ணா எனப் பலரோடு பிறந்தாலும் அவள் யாருடனும் இணைந்து விளையாடவோ, பேசவோ மாட்டாள்.எப்போதும் அவளுக்கென்று ஒரு உலகம். சதா சிந்தனையுடன் இருப்பாள். பிறர் பேசுவதை உன்னிப்பாகக் கேட்பாள். அவளுக்கு, மதிப்பெண்களுக்காகப் படிப்பதில் விருப்பமில்லை. அதனால் சரியாகப் படிக்கவில்லை என்பதால் எல்லோரும் அவளை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள். அவளுடைய சிந்தனையே வேறு.
திருமணம் ஆன பின்பே தோழிகள்மூலம் பல விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள்.ஞாபக சக்தியும், பன்முகத்திறமையும் கொண்ட அவள் இன்று பிற பெண்களுக்குப் பொருளீட்டவும் பிறர் தயவு இல்லாமல் வாழும் வழி சொல்லிக் கொடுக்கவும் முடிகிறது. இரு முகங்கள் கொண்ட அவளை அவள் உணர பல வருடங்கள் ஆயின.
இன்று மகளிர் தின விழாவில் ஒரு பிரபல தொலைக்காட்சி அவளுக்கு மகளிர் திலகம் என விருது கொடுத்துப் பாராட்டினார்கள். அவளால் இன்று வாழ்க்கையில் முன்னேறிய பல பெண்கள் அந்த விழாவிற்கு வந்திருந்தனர். ஒவ்வொரு பெண்களிடமும் ஏதோ திறமை ஒளிந்து கொண்டிருக்கும் .அதைத் தனக்கு பயனுள்ளதாக மாற்றுவது தனித்திறமை. முயற்சியும் உழைப்பும் இருந்தால் உலகத்தையே வெல்லலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு லதா என்று அவர்கள் பாராட்டி ப் பேசினார்கள்.
