சென்னையில் பிறந்து வளர்ந்து அண்ணா பல்கலையில் பொறியியல் பட்டப் படிப்பை சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற சீமா இப்படி " ஆட்டுக்கார அலமேலு " மாதிரி மாறுவாள் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை.
கல்லூரி புரொபசர் ராதா கிருஷ்ணனுக்கும், வங்கி மேலாளர் சுந்தரிக்கும் ஒற்றை மகளாய் மிகவும் செல்லச் சீமாட்டியாய் வளர்ந்தாள்.
அப்பா கண்டித்தால் அம்மாவிடம் அடைக்கலம் ஆவாள். அம்மாவின் கண்டிப்பிற்கு பெரிதாக பயப்பட மாட்டாள். முந்தானையைப் பிடித்தபடி திரிவாள். அம்மாவின் மீது கொஞ்சம் அளவுக்கதிகமான பிரியம்.
வங்கி வேலையில் நிறைய டென்ஷன் காரணமோ என்னவோ அவள் அம்மாவிற்கு ஜீரணக் கோளாறு வந்து எதை சாப்பிட்டாலும் வயிற்றில் தங்கலை.
ஒரே வாரத்தில் எழுந்து நடமாடவே தெம்பில்லாமல் என்புதோல் போர்த்திய உடம்பு போலாகி விட்டாள்.
துவண்டு கிடந்த அம்மாவை அவளும், அப்பாவும் பல ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துப் போய் சிகிச்சை செய்தும் பலனில்லை. நாளுக்கு நாள் உடல் நலிவடைந்து வந்தது.
அப்போ தான் ஒரு நாட்டு வைத்தியர் ஆட்டுப்பாலின் விசேஷ மருத்துவ குணங்கள் பற்றி சொன்ன யூடியூப் காணக் கிடைத்தது சீமாவுக்கு.
உடனே அம்மாவை அவரிடம் அழைத்துப் போனாள். பரிசோதித்த டாக்டர் " கவலைப் படாதீங்க, இது ஏதோ அஜீரணக் கோளாறு தான். வேறு எந்த மருந்தும் தேவையில்லை. தினமும் அவங்களை ஆட்டுப்பால் குடிக்கச் சொல்லுங்க . கண்டிப்பாக ஓரிரு மாதங்களில் சரியாகி விடும் " என்றார் .
சீமா இதோ ஆடு ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அழைத்துப் போகிறாள் அம்மாவின் நோயைக் குணப்படுத்திவிடும் என்னும் நம்பிக்கையோடு. நம்பிக்கை வெல்லட்டும்.