
அவன் சிறுவனாக இருக்கும்போதே மூக்குக் கண்ணாடி போட வேண்டியதாயிற்று. ஏதோ ப்ளஸ், மைனஸ், ஆஸ்டிக்மாடிஸம் என்று புரியாத வார்த்தைகளைச் சொல்லி, கோலி சோடா புட்டியின் அடிப்பாகத்தை வெட்டிச் செய்தாற் போன்ற கண்ணாடியை மாட்டிவிட்டார்கள். ‘சோடா புட்டி’ என்பதே அவன் பெயராகியதால், இயற்பெயர் எல்லோருக்கும் மறந்தே போனது!
பெரியவனாக வளர்ந்த பிறகு, புகழ் பெற்ற எழுத்தாளன் ஆனான். ஜிப்பா, வித்தியாசமாகப் படிய வாரிய ‘டை’ அடித்த முடி, அழகாகக் கத்தரித்துவிடப் பட்ட அடர்த்தியான மீசை, தோளில் ஒரு பையென அறிவுஜீவிக் களையுடன் உலாவினான். சோடா புட்டியில் மட்டும் மாற்றமில்லை.
அவன் தாத்தாவும் அந்தக் காலத்தில் தடித்த கருப்புப் பிரேமில் சோடா புட்டிக் கண்ணாடியுடன், கண்ணைச் சுருக்கி, அண்ணாந்து பார்த்தபடி நடந்து வருவதை அவன் இன்னும் மறக்கவில்லை. கண்ணாடிப் பிரேமின் ஒரு பக்கத் தண்டு உடைந்த பிறகும், அதில் ஒரு சிவப்புக் கயிரைக் கட்டி, காதில் சுற்றிக்கொண்டு அலைந்ததும் நினைவிலிருக்கிறது.
இன்று அவனுக்கு எல்லாம் மாறிவிட்டது. அழகிய நீல நிறத்தில் தடித்த பிரேம் போட்ட கண்ணாடி – ஆனாலும் அதே சோடா புட்டியும், அதனுள் தெரியும் அகன்ற கண்களும் மாறவேயில்லை.
சிறந்த எழுத்தாளர் என விருதுகள் பல பெற்ற பிறகும், அவனது பட்டப்பெயர் மட்டும் அப்படியே நிலைத்து விட்டது!
