
‘பெற்றோர்களை இழந்து.. யாருக்கோ அடிபணிந்து.. வாழும் வாழ்க்கை இனி தேவையில்லை’ என்று முடிவெடுத்த ரஞ்சிதா, அங்கிருந்த மலை உச்சியை நாடினாள்.
கோரைப்புற்கள் காற்றின் தாளத்திற்கு தலையசைத்தன..!
இளையராஜாவின் இசையினும்.. மெல்லிசையாய் மலையும் மரமும் சங்கீதக் கச்சேரி நடத்தின.
மனதில் இருந்த பாரமெல்லாம் அவள் கேசம் போல அலைபாய, அந்த குளிர்ந்தகாற்றைத் தன்னை மறந்து நாசியில் ஏந்தினாள்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உச்சியில் நின்று எட்டிப்பார்த்தாள்.
அந்த விளிம்பின் ஓரம், மணல் வாசமே இல்லாத பெரிய பாறை ஒன்றைப் பிளந்தவாறு, செடியின் சிறு கன்றொன்று தன் வேர்களைப் பரத்தி கம்பீரமாக நின்றது.
அதையே வெகு நேரம் பார்த்திருந்தாள்.
இறுதியில்.. அது தனக்குச் சொல்லப்பப்பட்ட செய்தியென ரஞ்சிதாவிற்குத் தோன்ற.. சாவதற்காய் உருவாக்கிய துணிச்சலை வாழ்வதற்காய் அதிகப்படுத்தினாள் .
காற்றில் ஆடும் கோரையாய் அவளும் இலகுவானாள்.
மனதிலிருந்த பயம், துக்கம், கோபத்தை அந்த மலை உச்சியில் காவு கொடுத்தவள், புது மனுஷியாய் வீட்டிற்குத் திரும்பினாள்..!
